திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த ஜவ்வாது மலைத்தொடர், உடையராஜபாளையம் பகுதியை ஒட்டியுள்ள வனப்பகுதியில் இருந்து, சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையையொட்டி நடமாடி வந்தது.
இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் கூச்சலிட்டும், பட்டாசுகளை வெடித்தும் யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், காட்டுயானை தேசிய நெடுஞ்சாலையைக் கடந்து ஊருக்குள் புகுந்துள்ளது.

இதனால் உடையராஜபாளையம், ஜமீன், குளிதிகை, வெங்கிலி, கீழ்முருங்கை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் ஒன்றிணைந்து காட்டு யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது நிலப்பகுதியில் புகுந்த யானையை, இளைஞர்கள், திருப்பத்தூர் மாவட்ட உதவி வன அலுவலர் ராதா கிருஷ்ணன் தலைமையிலான ஆம்பூர் மற்றும் ஒடுகத்தூர் வனத்துறையினர் மற்றும் ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் ஒன்றிணைந்து காட்டு யானையை தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க வைப்பதற்காக பெரும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர்.

அதை தொடர்ந்து ,விடியற்காலை யானை கீழ்முருங்கை பகுதியில் சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையைக் கடந்தது. அதனைத் தொடர்ந்து, வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் யானையை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டினர்.
இதனால் சுமார் 5-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சார்ந்த மக்கள் தூக்கத்தைத் தொலைத்து யானையை விரட்டினர்.

இந்த நிலையில் மலைப்பகுதிக்கு இன்னும் யானை செல்லாத நிலையில், வனப்பகுதியை ஒட்டியுள்ள நிலத்தில் திருப்பத்தூர் ஆட்சியர் தர்பகராஜ், நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த், ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன்,
திருப்பத்தூர் மாவட்ட வன அலுவலர் மகேந்திரன் ஆகியோர் ஆய்வு செய்து ஒற்றை கொம்பு காட்டு யானையை வனப்பகுதியில் விரட்ட நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.