தமிழக காவல்துறையில் பணியாற்றும் பெண் காவலர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவரை தேனியில் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.

இது தொடர்பான வழக்கு மதுரை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது சவுக்கு சங்கரை நேர்காணல் செய்த மற்றும் அதனை ஒளி பரப்பிய பெலிக்ஸ் ஜெரால்டு மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதி கருத்து தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து கடந்த 10 ஆம் தேதி இரவு டெல்லியில் திருச்சி காவல்துறை கண்காணிப்பாளரின் தனிப்படை ஆய்வாளர் வீரமணி தலைமையிலான காவல்துறையினர் கைது செய்தனர்.

அதை தொடர்ந்து அவர் ரயில் மூலம் சென்னைக்கு அழைத்து வரப்பட்டு, பின்னர் திருச்சி சுப்ரமணியபுரத்தில் உள்ள சைபர் கிரைம் அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டார்.
அவர் மீது ஆபாசமாக பேசுதல், அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல், பெண்களை இழிவு படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து அவர் மாவட்ட கூடுதல் நீதிபதி ஜெயசுதா முன்பு ஆஜர் படுத்தப்பட்டார். நீதிபதி உத்தரவின் பேரில் பெலிக்ஸ் ஜெரால்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்