திருவாரூர் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அரை மணி நேரத்திற்கு மேலாக மின்சாரம் தடைபட்ட காரணத்தினால் வென்டிலேட்டரில் சிகிச்சை பெற்று வந்த நபர் ஒருவர் மின் தடையால் வென்டிலேட்டர் இயங்காமல் அந்த பெண் பலி.
திருவாரூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மயிலாடுதுறையைச் சேர்ந்த பெண் ஒருவர் நுரையீரல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவசர சிகிச்சை பிரிவில் மின்சாரம் தடைபட்ட காரணத்தினால் வென்டிலேட்டர் இயங்காமல் போனது. அதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பெண் பரிதாபமாக உயிரிழந்தார். திருவாரூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மயிலாடுதுறை மாவட்டம் அருகே உள்ள குத்தாலம் தாலுகா பகுதியை சேர்ந்த அமராவதி என்ற 50 வயது மிக்க பெண், நுரையீரல் சிகிச்சைக்காக மருத்துவமையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இவர் இரண்டு நாட்களாக அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். நுரையீரல் பிரச்சனை என்பதாலும் மூச்சு திணறல் ஏற்படும் என்பதாலும் இவருக்கு வென்டிலேட்டர் மூலமாக சுவாசம் செலுத்தப்பட்டு வந்தது. சுவாசிப்பதில் சிரமப்பட்டதை அடுத்து அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். இந்த நிலையில் நேற்று மதியம் திடீரென அரை மணி நேரத்திற்கு மேலாக திருவாரூர் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள அவசர தீவிர சிகிச்சை பிரிவு வார்டில் மின்சாரம் தடை ஏற்பட்டது. இதனால் அமராவதிக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு மின்சாரம் இல்லாததால் வென்டிலேட்டர் இயங்காமல் அவர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்து விட்டார் என அவருடைய உறவினர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

உயிரிழந்த அமராவதியின் உடல் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.இது குறித்து உறவினர்கள் இறந்து போன அமராவதி என்ற பெண்ணிற்கு சிகிச்சை அளித்த மருத்துவரிடம் கேட்ட பொழுது, அதற்கு நாங்கள் என்ன செய்வது நீங்கள் மருத்துவமனை நிர்வாகத்திடம் தான் இது குறித்து விஷங்களை கேட்க வேண்டும் என தெரிவித்ததாக வேதனை தெரிவித்தார்கள் என கூறப்படுகிறது.