நாகை அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த முதியவருக்கு நாகை போக்சோ சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூபாய் 5 லட்சம் வழங்க அரசுக்கு பரிந்துரை.
நாகை மாவட்டம், கீழ்வேளூர் தாலுகா ராதாமங்கலம் பகுதியை சேர்ந்தவர் வயது 60 வயதான முதியவர் ராஜேந்திரன். இவர் கூலித் தொழிலாளி. மேலும் சம்பவத்தன்று ராஜேந்திரன் வீட்டின் அருகே அதே பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமி சாலையில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது விளையாடி கொண்டிருந்த சிறுமியை தின்பண்டம் வாங்கி தருவதாக கூறி ராஜேந்திரன் அந்த சிறுமியை கடைக்கு அழைத்து சென்று தின்பண்டம் வாங்கி கொடுத்து பின்னர் மறைவான இடத்துக்கு அந்த சிறுமியை அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்.

இதனை தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த சிறுமி கதறி கதறி அழுத கொண்டே வீட்டுக்கு ஓடி சென்று, தனது பெற்றோரிடம் நடந்ததை தெரிவித்தார். இதனை கேட்ட பெற்றோர் அதிர்ச்சி அடைந்து, உடனடியாக நாகை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் போலீசார் வயதான முதியவரை வலைவீசி பிடித்து, போலிசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, ராஜேந்திரனை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு நாகை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த குற்றப்பிரிவு வழக்கை விசாரித்த நீதிபதி மணிவண்ணன் இன்று தீர்ப்பு அளித்தார்.

அதில் 9 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக வயதான முதியவர் ராஜேந்திரனுக்கு ஆயுள் தண்டனையும், ரூபாய் 20 ஆயிரம் அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் ஒரு ஆண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு அளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூபாய் 5 லட்சம் வழங்க அரசுக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து சிறை தண்டனை விதிக்கப்பட்ட ராஜேந்திரனை காவல்துறையினர் கடலூர் மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.