அமெரிக்காவில் நடந்த துப்பாக்கி சூட்டில் 9 பேர் பலி.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ளது ஆலன் நகர். இங்குள்ள ஒரு பிரபல ஷாப்பிங் மாலில் நேற்று கூட்டம் நிரம்பி வழிந்தது. சனிக்கிழமை விடுமுறை தினம் என்பதால் வழக்கத்தை விட அதிகமாக கூட்டம் இருந்தது. அப்போது மாலின் 2-வது தளத்தில் மர்மநபர் ஒருவன் திடீரென இயந்திரத் துப்பாக்கியை எடுத்து கூட்டத்தை நோக்கி சரமாரியாக சுட்டப்படி ஓடினான்.
அப்போது மாலுக்குள் தனது குடும்பத்தினருடன் வந்திருந்த போலீஸ் அதிகாரி ஒருவர் “பீஸ்ட்” பட பாணியில் அந்த நபரை சுட்டுக் கொன்றார்.
இதனால் என்ன நடக்கிறது என்பதை சுதாரிப்பதற்குள்ளாக அங்குள்ளவர்கள் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தனர். பலர் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தனர்.இந்த சம்பவத்தில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 7 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். துப்பாக்கிச் சூடு நடத்திய நபரின் உடலை கைப்பற்றிய போலீஸார், அவன் யார், எதற்காக இந்த கொடூரத் தாக்குதலில் ஈடுபட்டான் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில், உயிரிழந்த பொதுமக்கள் 9 பேரில் ஒருவர் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் ஐஸ்வர்யா தட்டிகொண்டா என்பது தெரியவந்துள்ளது.
ஐதராபாத் மாநிலம் சரூர்நகரை சேர்ந்த மாவட்ட நீதிபதி தட்டிகொண்டா நர்சிரெட்டியின் மகள் ஐஸ்வர்யா, கடந்த இரண்டு ஆண்டுகளாக டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.
விடுமுறை நாளான நேற்று நண்பருடன் வணிக வளாகம் சென்ற நிலையில், இந்த துயர சம்பவம் நடந்துள்ளது. இதில், ஐஸ்வர்யாவின் நண்பர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

மேலும், அமெரிக்காவில் இருந்து ஐஸ்வர்யாவின் உடலை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான அனைத்து ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
அமெரிக்காவில் நீதிபதியின் மகள் துப்பாக்கிச்சூட்டிற்கு இரையாகி இருப்பது ஐதராபாத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவில் பொது இடங்களில் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தப்படுவது சர்வ சாதாரண நிகழ்வுகளாக மாறிவிட்டது. சில மாதங்களுக்கு முன்பு கூட பள்ளி ஒன்றில் மர்மநபர் துப்பாக்கியால் சுட்டதில் 10-க்கும் மேற்பட்ட எல்கேஜி மாணவர்கள் உயிரிழந்தனர். கடந்த 2021-ம் ஆண்டில் மட்டும் இதுபோன்ற துப்பாக்கிச் சூடு தாக்குதல்களில் 49 ஆயிரம் பேர் உயிரிழந்திருக்கின்றனர்.