ஜூன் 20 முதல் 29 வரை தமிழக சட்டப்பேரவை கூட்டம் வரும் காலையும், மாலையும் நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு கூறினார்.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவு செய்ய அலுவல் ஆய்வு கூட்டம் சபாநாயகர் அப்பாவு தலைமையில் தலைமை செயலகத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் சட்டப்பேரவை கூட்டத்தொடரை வரும் 20 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

கூட்டம் முடிந்த பிறகு நிருபர்களிடம் சபாநாயகர் அப்பாவு கூறியதாவது: சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 20 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை நடக்கும். மறைந்த விக்கிரவாண்டி எம்எல்ஏ புகழேந்தி மறைவுக்கு வரும் 20 ஆம் தேதி இரங்கல் தீர்மானம் நிறைவேற்றி,
அன்றைய தினம் பேரவை கூட்டம் ஒத்தி வைக்கப்படும். அதை தொடர்ந்து வரும் 21 ஆம் தேதி காலை 10 மணிக்கு சட்டசபை கூடும். இந்த நிலையில் வழக்கமாக காலை 10 மணிக்கு தொடங்கும் சட்டசபை நிகழ்வுகளை காலை 9.30 மணிக்கு தொடங்குவது தொடர்பாக விதிகள் குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் வரும் 21 ஆம் தேதி சட்டப்பேரவை கூடியதும் விதிகள் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு ஒப்புதல் பெறப்பட்டு நிறைவேற்றப்படும். அதை அடுத்து வரும் 22 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை காலை 9.30 மணிக்கு பேரவை கூட்டம் தொடங்கும்.
வருகிற 29 ஆம் தேதி தவிர மற்ற நாட்களில் காலை, மாலை என 2 பிரிவுகளாக கூட்டம் நடக்கும். காலை 9.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் சட்டசபை கூட்டம் நடக்கும்.
