இந்த ஆண்டு தீபாவளிக்கு அரசு டாஸ்மாக்கில் ரூ.467.69 கோடி வருமானம்..அப்படியானால் மது ஆலைகள் நடத்தும் திமுகவினரின் வருமானம் என்னவாக இருக்கும்? தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.
தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 2 நாளில் ரூ.467.69 கோடிக்கு மதுவிற்பனை செய்யப்பட்டுள்ளதை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அண்ணாமலை, சென்னை அண்ணா நகரில், மது போதையில் வாகனத்தை ஓட்டியதால் ஏற்பட்ட விபத்தில் , இருவர் பலியாகியிருக்கிறார்கள். பலர் படுகாயமடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அதே நேரம், தமிழகத்தில் கடந்த 2 நாட்களில் மட்டும் நடந்த மதுவிற்பனை, ரூ. 467.69 கோடி என டாஸ்மாக் நிறுவனம் பெருமையுடன் அறிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ள அண்ணாமலை, மதுவிலக்கு துறையா? அல்லது மது விற்பனைத் துறையா? என்ற சந்தேகம் வரும் அளவுக்கு, மது விற்பனையில் திமுக அரசு சாதனை படைத்து வருகிறது என விமர்சித்துள்ளார்.
மதுவால் ஏற்படும் உடல் நலக் குறைவு மரணங்கள், இது போன்ற விபத்துக்களால் பலியாகும் அப்பாவிகளின் மரணங்கள் எதைப் பற்றியும் கவலை இன்றி, உச்ச வரம்பு நிர்ணயித்து மது விற்பனையை திமுக நடத்தி வருகிறது எனக் கூறியுள்ள அண்ணாமலை, திமுகவினர் நடத்தும் மது ஆலைகளிடம் வாங்கி விற்கும் டாஸ்மாக் நிறுவனத்தின் விற்பனை இத்தனை என்றால், அந்த ஆலைகள் நடத்தும் திமுகவினரின் வருமானம் என்னவாக இருக்கும்? என வினவியுள்ளார். தங்களது கட்சிக்காரர்களின் வருமானத்துக்காக, அப்பாவிப் பொதுமக்கள் உயிரை பலிகொடுத்துக் கொண்டிருக்கிறது திமுக என்றும் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் திபாவளி டாஸ்மாக் விற்பனை அதிகரித்துக்கொண்டே போகிறது இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே போகிறது.இதனை அரசு கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது.இந்த நேரத்தில் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது அரசியல் முக்கியத்துவம் பெருகின்றது.இதற்கு திமுக வினர் என்ன பதில் சொல்லப்போகிறார்கள்.