- தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு கலை, அறிவியல் கல்லூரிகளிலும் மாணவிகளுக்கான தனி ஓய்வறை அமைப்பதற்கான 8 கோடியே 55 லட்சம் ரூபாயை மூன்று வாரங்களில் ஒதுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவிகளுக்கு சானட்டரி நாப்கின் வழங்கும் தானியங்கி இயந்திரங்கள் முறையாக பராமரிக்கப்படாமல் காட்சி பொருட்களாக வைக்கப்பட்டு உள்ளதாக தினத்தந்தி நாளிதழில் வெளியான செய்தி அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்தது.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பாலாஜி அமர்வு முன் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசுத்தரப்பில் ஆஜராகியிருந்த கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும் மாணவிகளுக்காக, தலா 5 லட்சம் ரூபாய் வீதம், 8 கோடியே 55 லட்சம் ரூபாய் செலவில் தனி ஓய்வறைகள் கட்ட உள்ளதாகவும், பள்ளிகளில் நாப்கின் இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ள விவ்ரங்கள் தொடர்பாக தகவல் சேகரிக்கப்பட்டு, தொகுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
இதையடுத்து, அரசு கல்லூரிகளில் மாணவிகளுக்கு தனி ஓய்வறைகள் கட்டுவதற்கான 8 கோடியே 55 லட்சம் ரூபாயை மூன்று வாரங்களில் ஒதுக்கீடு செய்ய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை மூன்று வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.