நாடாளுமன்ற தேர்தல் பணிகளை மேற்கொள்ளும் வகையில், தொகுதிபங்கீடு, பிரசாரம் உள்ளிட்டவைகளுக்கு அதிமுகவில் தனித்தனியே குழு அமைத்து உள்ளது. இதற்கான அறிவிப்பை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார். நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு இன்னும் ஓரிரு மாதங்களில் வெளியாக உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் மும்முரம் காட்டி வருகின்றன.
மேலும் தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்க ஆரமித்து உள்ளது. பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியுள்ள நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தனிக்கூட்டணியை ஏற்படுத்தி போட்டியிட போவதாக அறிவித்து உள்ளது. இந்த நிலையில், கூட்டணி பேச்சுவார்த்தை, பிரசாரம், விளம்பரம் என அனைத்துக்கும் தனித்தனியாக குழு அமைத்து அதற்கான பட்டியலை அந்த கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டு உள்ளார்.

குறிப்பாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில்;- நாடாளுமன்ற பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால் அதை முன்னிட்டு, அதிமுக சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்ள தொகுதிப்பங்கீட்டுக் குழு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, தேர்தல் பிரசாரக்குழு, தேர்தல் விளம்பரக்குழு ஆகிய குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
அதன்படி, அதிமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப்பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அதிமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள குழுவில் முன்னாள் அமைச்சர்கள் கே.பி. முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, பா. பென்ஜமின் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர். தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவில், முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விசுவநாதன், பொன்னையன், பொள்ளாச்சி ஏ. ஜெயராமன், ஜெயக்குமார், சி.வி. சண்முகம், செம்மலை, பா. வளர்மதி, ஓ.எஸ். மணியன், ஆர்.பி. உதயகுமார், வைகைச்செல்வன் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

மேலும், பிரசார பணிகளை மேற்கொள்வதற்கான தேர்தல் பிரசாரக் குழுவில் முன்னாள் சபாநாயகர் தனபால் மற்றும் முன்னாள் ஒன்றிய அமைச்சர் மு. தம்பிதுரை, முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், என். தளவாய்சுந்தரம், செல்லூர் மு. ராஜூ, ப. தனபால், அன்பழகன், காமராஜ், கோகுல இந்திரா, உடுமலை ராதாகிருஷ்ணன், சு. சிவபதி ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
தேர்தல் சம்பந்தமான விளம்பர பணிகளை மேற்கொள்வதற்கான தேர்தல் விளம்பர குழுவில், முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜூ, ராஜேந்திர பாலாஜி, அக்ரி கிருஷ்ணமூர்த்தி, ராஜலெட்சுமி மற்றும் நிர்வாகிகள் பி. வேணுகோபால், பரமசிவம், இன்பதுரை, அப்துல் ரஹீம், ராஜ் சத்யன் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.