களிமண்ணை பயன்படுத்தி அச்சு அசலாக ராயல் என்பீல்டு உருவாக்கிய திருப்பூர் மாணவி.
திருப்பூர் முதலி பாளையத்தில் செயல்பட்டு வரும் நிஃப்டி பின்னலாடை மற்றும் ஆடை வடிவமைப்பு கல்லூரியில் 3 ஆம் ஆண்டு காஸ்டியூம் டிசைனிங் அண்ட் பேஷன் துறை படிக்கும் மாணவி கமலி. இவர் களிமண் மற்றும் அட்டையை கொண்டு தத்ரூபமாக ராயல் என்ஃபீல்டு இருசக்கர வாகனத்தை வடிவமைத்துள்ளார்.

இந்த வாகனத்தை மிக அருகில் வந்து தொட்டு பார்த்தால் மட்டுமே இந்த இருசக்கர வாகனம் களிமண்ணால் செய்யப்பட்டது என்பது தெரியவரும். கமலி ஃபேஷன் டிசைனிங் படித்து வந்தாலும் இவருக்கு களிமண்ணை கொண்டு சிற்பங்கள் செய்வதில் சிறு வயது முதலே ஆர்வம் அதிகம்.
இதன் காரணமாக பொன்மொழிகள் தேச தலைவர்களின் உருவப்படம் ஆகியவற்றை களிமண் கொண்டு வடிவமைத்துள்ளார். இவருக்கு நீண்ட நாட்களாகவே களிமண்ணை கொண்டு பெரிய அளவிலான பொருட்களை வடிவமைக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்து கொண்டே இருந்தது.

இவரது எண்ணத்தை அறிந்த கல்லூரி நிர்வாகமும் இவருக்கு தேவையான உதவிகளை செய்தது. அதன் மூலம் தற்பொழுது ராயல் என்ஃபீல்டு இருசக்கர வாகனத்தை வடிவமைத்துள்ளார்.
இதற்காக 95 கிலோ களிமண்ணை பயன்படுத்தியது மட்டுமின்றி வெறும் 157 நாட்களிலே இதனை செய்து முடித்துள்ளார். பொதுவாக பயணம் மேற்கொள்வதில் அதிக ஆர்வம் கொண்ட கமலி, அதனை முன்மாதிரியாக வைத்து இந்த இரு சக்கர வாகனத்தை வடிவமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தினர் மாணவி உருவாக்கி உள்ள இந்த இருசக்கர வாகனத்தை தங்களது ஷோரூமில் காட்சி பொருளாக வைப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
இவர் வடிவமைத்துள்ள இந்த இருசக்கர வாகனம் லிம்கா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்க்கு அனுப்பப்பட்டுள்ளது. கமலிக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன. இந்த சம்பவம் அனைவரும் மத்தியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.