மின்கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று மமக தலைவர் ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார். மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ வெளியிட்ட அறிக்கை:-
தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு ஜூலை 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது.
இந்த புதிய மின் கட்டண உயர்வின்படி, 400 யூனிட் வரை பயன்படுத்தும் வீடுகளுக்கு யூனிட் ஒன்றுக்கு ரூ.4.60 காசுகள் வசூலிக்கப்பட்டு வந்த கட்டணம், தற்போது ரூ.4.80 காசுகளாக உயர்த்தப்பட்டுள்ளது.

அதேபோல், 401 யூனிட் 500 யூனிட் வரையிலான வீடுகளுக்கான மின் கட்டணம், ரூ.6.15 காசுகளில் இருந்து ரூ.6.45 காசுகளாக உயர்த்தப்பட்டுள்ளது. 501 முதல் 600 யூனிட் வரையிலான வீடுகளுக்கான மின் கட்டணம், யூனிட் ஒன்றுக்கு ரூ.8.15 காசுகளில் இருந்து ரூ.8.55 காசுகளாக உயர்த்தப்பட்டுள்ளது.
601 முதல் 800 யூனிட் வரையிலான வீடுகளுக்கான மின் கட்டணம், யூனிட் ஒன்றுக்கு ரூ.9.20 காசுகளில் இருந்து ரூ.9.65 காசுகளாக உயர்த்தப்பட்டுள்ளது. 801 முதல் 1,000 யூனிட் வரையிலான வீடுகளுக்கான மின் கட்டணம், யூனிட் ஒன்றுக்கு ரூ.10.20 காசுகளில் இருந்து ரூ.10.70 காசுகளாக உயர்த்தப்பட்டுள்ளது.

1000 யூனிட்டுக்கு மேல் வீடுகளுக்கான மின் கட்டணம் யூனிட் ஒன்றுக்கு ரூ.11.25 காசுகளில் இருந்து ரூ.11.80 காசுகளாக உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மின்சார கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மின்கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்.

ஒன்றிய அரசின் மின் அமைச்சக வழிகாட்டுதலின் படி, விநியோக முறையை வலுப்படுத்தும் திட்டத்தின் கீழ், ஒன்றிய அரசின் நிதியை பெற ஆண்டுதோறும் மின் கட்டணம் உயர்த்த வேண்டும் எனும் முன் நிபந்தனையின் அடிப்படையில் இது நடந்திருப்பதாக விளக்கம் அளித்திருக்கிறது.

பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் அனைத்து வகை மின் பயனிட்டாளர் கட்டணம் குறைவாக இருந்த போதினும் தற்போதைய மக்களின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு இந்த கட்டண உயர்வு திரும்பப் பெற வேண்டும்.
மின்கட்டண உயர்வின் காரணமாக சிறு, குறு நிறுவனங்களும் வியாபாரிகளும் பெருமளவில் பாதிக்கப்படுவர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.