விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 10 ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது.
இந்த நிலையில் 8 ஆம் தேதி மாலை 6 மணி முதல் வாக்குப்பதிவு முடிவடையும் வரையில் 1951 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்பிரிவு 126-ன் கீழ், பின்வரும் விதிமுறைகள் நடைமுறையில் இருக்கும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். அவை பின்வருமாறு:-
1. தேர்தல் தொடர்பான யாதொரு பொது கூட்டத்தையோ அல்லது ஊர்வலத்தையோ யாரும் ஒருங்கிணைக்கவோ, நடத்தவோ அல்லது அவற்றில் பங்கேற்கவோ கூடாது.

2. யாதொரு தேர்தல் விவகாரத்தையும், திரைப்படம், தொலைக்காட்சி. எப்.எம். ரேடியோ, வாட்ஸ்அப், முகநூல், டிவிட்டர் போன்ற அல்லது இதுபோன்ற சாதனம் வாயிலாகப் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கக்கூடாது.
குறுஞ்செய்தி மற்றும் இணையம் உள்பட அனைத்து மின்னணு வடிவிலான தகவல் தொடர்பையும் இது உள்ளடக்கும்.
3. பொதுமக்களில் எந்த வொரு நபரையும் ஈர்க்கிற வகையில், யாதொரு இசை நிகழ்ச்சி அல்லது யாதொரு திரையரங்க செயல்பாடு அல்லது எவ்வித ஏதேனும் பிற கேளிக்கை அல்லது பொழுதுபோக்கு நிகழ்ச்சியை நடத்த அல்லது,
ஏற்பாடு செய்வதன் மூலம் அங்குள்ள பொதுமக்களிடம் யாதொரு தேர்தல் விவகாரத்தையும் யாதொரு நபரும் பரப்புரை செய்யக்கூடாது.
இந்த விதிமுறை மற்றும் மேற்கண்ட 2 விதிமுறைகள் எவ்விதத்தில் மீறப்பட்டாலும் 2 ஆண்டுகள் சிறை அல்லது அபராதம் அல்லது இவை இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.

4. தொகுதி வெளியே இருந்து அழைத்து வரப்பட்ட அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள், கட்சி பணியாளர்கள் மற்றும் அத்தொகுதியின் வாக்காளர்கள் அல்லாதோர் 8 ஆம் தேதி மாலை தொகுதியை விட்டு வெளியேற வேண்டும்.
5. கல்யாண மண்டபம், சமுதாயக்கூடம், தங்கும் விடுதிகள், விருந்தினர் இல்லம் ஆகிய இடங்களில் வெளியாட்கள் யாரேனும் தங்கியுள்ளனரா என்பது கண்டறியப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.