சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன் நடிப்பில், தேவிஸ்ரீபிரசாத் இசையில் உருவான புஷ்பா திரைப்படம் கடந்த ஆண்டு டிசம்பரில் வெளியாகி மிகப்பெரும் வரவேற்பை பெற்றது.
தெலுங்கு மொழியில் உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம், தமிழ், இந்தி மலையாளம், கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் மிகப் பெரும் வரவேற்பை பெற்றது. செஞ்சந்தனம் மரங்களை வெட்டும் கூலித் தொழிலாளியாக தொடங்கி, மிகப்பெரிய கடத்தல் தாதாவாக அல்லு அர்ஜுன் உருவாகுவது முதல் பாகத்தில் இடம்பெற்றிருக்கும்.
விறுவிறுப்பான காட்சிகள், மிரட்டலான வில்லன்கள், அதிரடியான பாடல்கள் மனதை ஈர்க்கும் காதல் காட்சிகள் என புஷ்பா திரைப்படம் மிகச்சிறப்பான கமர்சியல் திரைப்படமாக வெளியானது. படத்தின் ஹீரோயின் ராஷ்மிகா மந்தனாவிற்கு குறிப்பிடத்தகுந்த காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும்.

சமந்தா ஆடிய ஊ சொல்றியா பாடல் மிகப் பெரும் வரவேற்பைப் பெற்றது. வில்லன்களாக பகத் பாசில், தனஞ்செய், சண்முக், சுனில், அனுசுயா பரத்வாஜ் அஜய் கோஸ் உள்ளிட்டோர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தனர்.
புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தில் அல்லு அர்ஜுன் தனது சாம்ராஜ்யத்தை எவ்வாறு விரிவுபடுத்தினார் என்பது குறித்த காட்சி இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக சீனா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இரண்டாம் பாகத்தில் மாஸ் லுக் நேற்று வெளியானது.
புடவை, வளைவயல், கழுத்தில் எலுமிச்சை மாலை என பெண்ணும் ஆணும் கலந்த கெட்டப்பில் அல்லு அர்ஜூன் இருக்கிறார்.கையில் துப்பாக்கியுடன் வித்தியாசமான லுக்காக இது உள்ளது. நீண்ட நாட்களாக புஷ்பா அப்டேட்டை எதிர்பார்த்து காத்திருந்த அல்லு அர்ஜுன் ரசிகர்களுக்கு புஷ்பா 2 லுக் குஷியை ஏற்படுத்தியுள்ளது.