தமிழகத்தில் அதிகரித்து வரும் தெரு நாய் தொல்லைகளை கட்டுப்படுத்த உத்தரவிட கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல்.
மத்திய அரசின் சுகாதாரத்துறை மற்றும் விலங்குகள் நலத்துறை செயலாளர் மற்றும் தமிழ்நாடு அரசு தரப்பில் உரிய பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு.
தமிழகத்தில் அதிகரித்து வரும் தெரு நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த கோரி மதுரையைச் சேர்ந்த ரமேஷ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.

அதில், “தமிழகத்தில் தெரு நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குழந்தைகள், இளைஞர்கள், முதியவர்கள் தெரு நாய்களால் கடிக்கப்பட்டு, பாதிப்புக்கு உள்ளாகும் அபாயம் அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக உலக சுகாதார மையமும் எச்சரிக்கையை வழங்கி உள்ளது. இது தொடர்பாக நடவடிக்கை கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆகவே, ” தமிழகத்தில் பொது இடங்களில் சுற்றித் திரியும் தெரு நாய்களை அகற்றுவதோடு, நாய்களுக்கான கருத்தடை சிகிச்சையை முறையாக செய்யவும், ரேபிஸ் தடுப்பூசிகள் அனைத்து அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார மையங்களில் போதுமான அளவில் இருப்பதை உறுதிப்படுத்தவும் உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கௌரி அமர்வு, ” உயர்நீதிமன்ற வளாகங்களிலேயே நாய்கள் சுற்றித்திரியும் நிலை உள்ளது. அதையே கட்டுப்படுத்த நடவடிக்கை இல்லை தமிழக முழுவதும் இதே நிலைதான் உள்ளது இது ஒரு புறம் இருக்க விலங்குகள் பாதுகாவலர் என்ற போர்வையில் மற்றொரு தரப்பினர் விலங்குகள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என கூறி வருகின்றனர்
மேலும் கருத்தடை செய்யாமல், காதின் ஓட்டை போட்டு விட்டு கருத்தடை செய்ததாக கணக்கு காட்டுகின்றனர்.
உள்ளாட்சி அமைப்பினரின் இந்த செயலை என்ன செய்வது என கூறிய நீதிபதிகள் வழக்கு தொடர்பாக மத்திய அரசின் சுற்றுச்சூழல் சுகாதாரத் துறை மற்றும் விலங்குகள் பாதுகாப்பு நலத்துறை செயலாளர்கள் மற்றும் தமிழ்நாடு அரசு தரப்பில்
பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை 2 வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.