கோவையை எட்டிமடையில் கேரள சாலை செல்கிறது. இந்த சாலையில் ஒரு கி.மீ. தூரத்தில் காட்டு பகுதியில் டாஸ்மாக் கடை உள்ளது. அதையொட்டி பார் உள்ளது. இங்கு வேலை செய்யும் ஊழியர்கள், பாரின் பின்புறம் உள்ள அறையில் ஓய்வு எடுத்துக் கொண்டு இருந்தனர். இந்த நிலையில் அதிகாலை 3.30 மணியளவில் பாரின் கதவை சிலர் தட்டினார்கள். ஆனால் யாரும் திறக்கவில்லை. இதையடுத்து அந்த நபர்கள், பாரின் பின்பக்கம் இருந்த அறையின் கதவை தட்டினார்கள். உடனே அங்கு ஓய்வு எடுத்துக் கொண்டு இருந்த ஒரு ஊழியர் எழுந்து, ஜன்னலை திறந்து பார்த்தார்.

அப்போது அங்கு 3 பேர் நின்று கொண்டு இருந்தனர். உடனே அவர்கள், அந்த ஊழியரிடம் மது வேண்டும் என்று கேட்டு உள்ளனர். அதற்கு அவர், இப்போது இல்லை, காலையில் வாருங்கள் என்று கூறிவிட்டு ஜன்னலை அடைத்து விட்டார். அதன் பிறகும் அந்த 3 பேரும் சேர்ந்து அறையின் கதவை தட்டிக் கொண்டே இருந்தனர். இதனால் கோபம் அடைந்த அந்த ஊழியர், கதவை திறந்து பாரில் மதுவகைகள் எதுவும் இல்லை, காலையில் டாஸ்மாக் கடை திறந்ததும் வாங்கிக் கொள்ளலாம் என்று கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள், துப்பாக்கியை எடுத்து மது பாட்டில்களை கொடுக்கவில்லை என்றால் சுட்டுக் கொன்று விடுவோம் என்று மிரட்டி உள்ளனர்.

இதனால் பயந்து போன அந்த ஊழியர், அங்கிருந்த சில மது பாட்டில்களை எடுத்து அவர்கள் 3 பேரிடமும் கொடுத்து உள்ளார். மதுபாட்டில்கள் கிடைத்ததும் அந்த 3 பேரும் அங்கிருந்து சென்று விட்டனர். இது குறித்து அந்த ஊழியர் க.க.சாவடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். சி.சி.டி.வி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வந்தனர். தொடர்ந்து கேரள மாநிலம் கொழிஞ்சாம் பாறையை சேர்ந்த விபின், சதீஷ், அர்ஜுன் ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர்கள் பயன்படுத்தியது பறவைகளை விரட்ட பயன்படுத்தும் ஏர் கன் வகையை சேர்ந்த துப்பாக்கி என்பதும் தெரியவந்தது.