பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கோதுமை விலை உயர்வு, மின் கட்டண உயர்வு, கூடுதல் வரி உள்ளிட்ட நிர்வாக முடிவுகளை கண்டித்து ஜம்மு காஷ்மீர் கூட்டு அவாமி நடவடிக்கை குழு (ஜெஏஏசி) தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை தலைநகர் முசாபராபாத்தில் முழு அடைப்பு போராட்டம் தொடங்கியது.
பல இடங்களில் நடந்த மக்கள் பேரணியில் பெரும் வன்முறை சம்பவங்கள் நடந்தன. கடந்த 11 ஆம் தேதி போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் ஒரு போலீசார் பலியானார்.

அப்போது 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்களில் பலர் போலீசார் ஆவர். அரசு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தியும், போராட்டம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இந்த நிலையில், 4-வது நாளாக நேற்று முழு கடை அடைப்பு, போக்குவரத்து நிறுத்த போராட்டம் தொடர்ந்தது.

பல முக்கிய சாலைகளை போராட்டக்காரர்கள் மூடி உள்ளிருப்பு போராட்டம் நடத்துவதால் பதற்றமான சூழல் நிலவுகிறது. ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் நேற்று இஸ்லாமாபாத்தில் உயர்மட்ட கூட்டத்தை கூட்டினார்.

ஆக்கிரமிப்பு காஷ்மீரின் பிரதமரான சவுத்ரி அன்வருல் ஹக்குடன் ஷெரீப் பேசியதாகவும், பிராத்தியத்தில் உள்ள பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-என் கட்சியினருடன் பேசி பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
வன்முறையை தொடர்ந்து பல இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அனைவரும் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.