பல்லடம் செய்தியாளரை அரிவாளால் தாக்கிய சம்பவத்தை கண்டித்து கோவை மாவட்ட செய்தியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.
திருப்பூர் மாவட்டம், அடுத்த பல்லடம் தாலுக்காவில் தனியார் தொலைக்காட்சியில் (நியூஸ் 7) செய்தியாளராக பணியாற்றி வருபவர் நேசபிரபு. இவரை தாக்க மர்ம கும்பல் ஒன்று நோட்டம் விட்டு வந்துள்ளது. நேற்று பதிவெண் இல்லாத இரண்டு இரு சக்கர வாகனங்களில் வந்த மர்ம நபர்கள் நேசபிரபுவை வீட்டில் இருந்து வெளியே வந்த நிலையில், அவரை விரட்டி அங்குள்ள பெட்ரோல் பங்க்கில் வைத்து அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை கொண்டு சரமாரியாக தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.

இதில் படுகாயம் அடைந்த நேசபிரபு மிகவும் ஆபத்தான நிலையில் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தொடர் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முன்னதாக நேசபிரபு, மர்ம கும்பல் தன்னை நோட்டமிடுவதாகவும், அச்சுறுத்தல் இருப்பதாகவும் காமநாயக்கன் பாளையம் காவல்துறையினரிடம் கூறியும், காவல்துறை நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என தெரிகிறது. நேசபிரபு காவல்துறையினரிடம் கூறும் போது போலிசார் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த சம்பவம் தடுக்கப்பட்டிருக்கும்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் உள்ள பத்திரிக்கையாளர்கள், பத்திரிக்கை சங்கங்கள், ஊடகவியலாளர்கள் காவல்துறையினர் அலட்சியமாக இருந்ததற்கு கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் அந்த கும்பலை உடனடியாக பிடித்து உரிய நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் உள்ள செய்தியாளர்கள், பத்திரிக்கையாளர்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகம் முன்பு, கோவை மாவட்ட பத்திரிக்கையாளர்கள், ஊடகவியலாளர்கள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசாங்கம் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமெனவும், முன்கூட்டியே நேசபிரபு காவல்துறையினருக்கு தகவல் அளித்தும் அலட்சியமாக இருந்த காமநாயக்கன்பாளையம் காவலர்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கவும் வலியுறுத்தப்பட்டது.