திருநெல்வேலியில் இரண்டு நாள்களுக்கு முன்பு காணாமல் போன, காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
முன்னதாக கடந்த மாதம் 30-ம் தேதி ஜெயக்குமார் தனக்கு சிலர் கொலை மிரட்டல் விடுவதாகவும், அவர்கள் வீட்டை சுற்றி வருவதாக கேவி தங்கபாலு, ரூபி மனோகரன் எம்எல்ஏ உள்ளிட்ட 6 பேர் பெயர்களை குறிப்பிட்டு காவல்துறையிடம் புகார் அளித்திருந்தார்.

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.பி.கே ஜெயக்குமார் இரண்டு தினங்களாக காணவில்லை என அவரது மகன் உவரி காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் இன்று அவரது வீட்டிற்கு அருகே உள்ள தோட்டத்தில் ஜெயக்குமாரின் உடல் பாதி எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் உறுதி செய்துள்ளனர்.
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்தவர் கே.பி.கே.ஜெயக்குமார். இவர் திசையன்விளை அடுத்த கரைச்சுற்றுப்புதூரில் வசித்து வந்தார்.

இந்த நிலையில், ஜெயக்குமாரை காணவில்லை என அவரது மகன் கருத்தையா ஜாப்ரின், உவரி காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் அளித்தார். இந்த சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து உவரி போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன ஜெயக்குமாரை தனிப்படை அமைத்து தீவிரமாகத் தேடினர். அவரது செல்போன் நம்பரை வைத்து அவரது இருப்பிடத்தை கண்காணித்தனர்.
இது குறித்து ஜெயக்குமாரின் மகன் கருத்தையா ஜெப்ரின், “தனது புகார் மனுவில் தனது தந்தைக்கு கடன் பிரச்சனை இருப்பதாகவும், சிலர் தந்தையிடம் கடன் பெற்று ஏமாற்றி இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் கடன் விவகாரத்தில், பலர் தனது தந்தைக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளதாகவும் புகாரில் குறிப்பிட்டிருந்தார். இதற்கிடையில் தனக்கு கொலை மிரட்டல் வருவதாக ஜெயக்குமாரே கடந்த ஏப்ரல் மாதம் 30 ம் தேதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு புகார் அளித்திருந்தார்.
அதில் அவர் “சமீப காலமாக எனக்கு கொலை மிரட்டல் வருகிறது. இரவு நேரங்களில் எனது வீட்டு முன்பு சந்தேகத்திற்கு இடமான வகையில் அடையலாம் தெரியாத மர்ம நபர்களின் ஆள் நடமாட்டம் இருக்கிறது.
எனக்கு ஏதாவது நேர்ந்தால் கீழ்க்கண்ட நபர்கள் தான் பொறுப்பு எனக்கூறி தற்போதைய நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொருளாளருமான ரூபி மனோகரன் எம்எல்ஏ, கேவி.தங்கபாலு உட்பட 6 பேரின் பெயர்களை” தனது புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் “ரூபி மனோகரன் தனக்கு பல காரியங்களை செய்து தருவதாக கூறி சுமார் ரூ.70 லட்சம் பணம் பெற்றதாகவும், தற்போது நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அவர் கூறியதால் ரூ.8 லட்சம் செலவு செய்தேன்.
அந்த பணத்தையும் திரும்ப தரவில்லை. மேலும், காங்கிரஸ் முன்னாள் மாநில தலைவர் கேவி.தங்கபாலு தேர்தலில் செலவு செய்ய சொன்னார் என்று ரூ.11 லட்சம் வரையிலும் செலவு செய்தேன். அந்த பணத்தை ரூபி மனோகரனிடம் கேட்க சொன்னார். ஆனால், கேட்டதற்கு அவர் எனக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார் என குறிப்பிட்டிருந்தார்.
ஏற்கனவே, நெல்லை மாவட்ட காங்கிரஸில் கடும் உள்கட்சிப் பூசல் நிலவுகிறது. குறிப்பாக, ஜெயக்குமார் பொறுப்பு வகிக்கும் கிழக்கு மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் தொடங்கி கீழ்மட்டம் வரை அனைத்து நிர்வாகிகள் இடையேயும் உள்கட்சி பூசல் நிலவுகிறது.

அதில், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் ஒரு பிரிவாகவும், மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தரப்பினர் ஒரு பிரிவினராகவும் செயல்பட்டு வருகின்றனர்.
இதுபோன்ற சூழ்நிலையில் தனக்கு கொலை மிரட்டல் இருப்பதாக சுட்டிக்காட்டிய நபர்களில் சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் மற்றும் கேவி.தங்கபாலு பெயர்களை ஜெயக்குமார் குறிப்பிட்டிருந்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
எனவே, ஜெயக்குமார் கடன் மற்றும் கொலை மிரட்டல் பிரச்சனை காரணமாக தானாகவே வீட்டை விட்டு தலைமறைவாகி விட்டாரா? அல்லது பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை தொடர்பாக மர்ம நபர்கள் யாரேனும் அவரை கடத்தி வைத்திருந்தார்களா?

என்பன உள்ளிட்ட பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் கரைச்சுத்துப்புதூர் அருகே உள்ள தோட்டத்தில் காங்கிரஸ் மாவட்ட தலைவர் கேபிகே ஜெயக்குமார் பாதி உடல் எரிந்த நிலையில் சடலமாக இன்று காலை மீட்கப்பட்டார்.
இந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஜெயக்குமார் சடலத்தை மீட்ட போலீசார் அவரது உயிரிழப்புக்கு என்ன காரணம்? என்று தீவிர விசாரணை செய்து வருகின்றனர். குறிப்பாக, பாதி உடல் எரிந்த நிலையில் மீட்கப்பட்டதால் யாரேனும் அவரை தீ வைத்து எரித்தார்களா?

அல்லது அவரே கடன் பிரச்சினை காரணமாக தன்னை தானே எரித்து தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணங்களில் 5 தனிப்படை அமைத்து தீவிர விசாரணையை போலீசார் தொடங்கியுள்ளனர்.
நெல்லையில் பிரபல தேசிய கட்சியின் மாவட்ட தலைவர் காணாமல் சென்று இரண்டு நாட்களில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.