திருமண நிச்சயத்திற்கு சென்ற போது, காரை வழிமறித்து இளம் பெண்ணை கடத்தி காதலன் திருமணம் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாவட்டம், அடுத்த இளம்பிள்ளை அருகே குருநாதசாமி கோயில் தெருவைச் சேர்ந்தவர் அய்யப்பன் வயது (48). இவர் சேலை டிசைனிங் ஒர்க் தொழில் செய்கிறார். இவருக்கு 2 மகள்கள். பிஎஸ்சி பட்டதாரியான மூத்த மகள் பிரகதீஸ்வரிக்கு வயது (21), திருமணம் செய்து வைக்க அவர் முடிவு செய்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம், ஜலகண்டாபுரத்தை சேர்ந்த மாப்பிள்ளை வீட்டிற்கு நிச்சயதார்த்த விழாவிற்காக காரில் அய்யப்பன் குடும்பத்துடன் புறப்பட்டு சென்றார். சின்னபணிக்கனூர் கரியபெருமாள் கோயில் அருகே சென்ற போது, முன்னால் மற்றொரு கார் வந்து நின்றது.
அந்த காரில் இருந்து முகமூடி அணிந்து கொண்டு 5 பேர் கீழே இறங்கி வந்தனர். அவர்கள், கார் கண்ணாடியை உடைத்து, கத்தி, இரும்பு ராடை காட்டி மிரட்டி, உள்ளே இருந்த நிச்சயதார்த்த பெண்ணான பிரகதீஸ்வரியை வெளியே இழுத்தனர்.

அப்போது அவரது தங்கை தடுக்கவும், அவரை அடித்து கீழே தள்ளி விட்டு மற்றொரு காரில் பிரகதீஸ்வரியை ஏற்றி கொண்டு கடத்தி சென்றனர். சினிமாவில் வருவது போல், சில நிமிடங்களில் இந்த சம்பவம் நடந்தது.
அப்போது கடத்தப்பட்ட காரில், சேலம் சின்னப்பம்பட்டியை சேர்ந்த ஹரிஅரவிந்த் வயது (23) என்பவர் இருந்துள்ளார். அவர், பிரகதீஸ்வரியை காதலித்து வந்ததாக, அவரது தங்கை தனது பெற்றோரிடம் தெரிவித்தார்.

இதை அடுத்து சம்பவம் தொடர்பாக ஜலகண்டாபுரம் போலீசில் ஹரிஅரவிந்த் மீது அய்யப்பன் புகார் கொடுத்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் ஹரிஅரவிந்த் உள்ளிட்ட 6 பேரை பிடிக்க தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதில், கடத்தப்பட்ட பிரகதீஸ்வரியை ஹரிஅரவிந்த் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்ததும், இதனை அறிந்த பெற்றோர், வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் நிச்சயிக்க சென்றதும் தெரியவந்தது.

அப்போது நிச்சயத்திற்கு செல்வதை பிரகதீஸ்வரி மூலம் அறிந்து கொண்டு, வழியில் காரை வழிமறித்து இந்த கடத்தலை ஹரிஅரவிந்த் தனது நண்பர்களுடன் அரங்கேற்றியிருப்பது தெரிந்தது. இதனிடையே, கடத்தப்பட்ட பிரகதீஸ்வரியை, அவரது காதலன் ஹரிஅரவிந்த் கோயிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார்.
இனி தங்களை தேட வேண்டாம் என அவர்கள் போனில் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். இந்த தகவலை போலீசாரிடம், பெண்ணின் தந்தை அய்யப்பன் கூறினார்.

இருப்பினும் பெண் கடத்தல் தொடர்பாக வழக்கு பதிவு செய்திருப்பதால் ஹரிஅரவிந்த், அவரது கூட்டாளிகள் 5 பேர் மற்றும் பிரகதீஸ்வரியை போலீசார் தேடினர். இந்த நிலையில் கடத்தலில் ஈடுபட்ட ஹரிஅரவிந்த்தின் கூட்டாளிகள் 5 பேரை நேற்று பிடித்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.