புதுச்சேரியை சேர்ந்த ஐந்தாம் வகுப்பு சிறுமி கடந்த சனிக்கிழமை காணாமல் போன நிலையில் , போலீசார் இன்று அவரை சடலமாக மீட்டுள்ளனர் .
புதுச்சேரி சோலை நகர் பகுதியை சேர்ந்தவர் நாராயணன் – மைதிலி தம்பதியினர் இவர்களது 9 வயது மகள் ஆர்த்தி அதேபகுதியிலுள்ள அரசு பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த சனிக்கிழமை மாலை தனது வீட்டின் அருகே விளையாடச் சென்றவா் அதன்பின் வீடு திரும்பவில்லை.
இது தொடர்பாக முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் அவர்களது பெற்றோர் புகார் தெரிவித்தனர் .

மேலும், கடந்த இரண்டு நாட்களாக காணாமல் போன சிறுமி ஆர்த்தி குறித்து எந்த தகவலும் கிடைக்காததால், போலீசார் அலட்சியமாக செயல்படுவதாக குற்றச்சாட்டி சோலைநகர் பொதுமக்கள் மற்றும் ஆர்த்தியின் உறவினர்கள் நேற்று முத்தியால்பேட்டை மணிக்கூண்டு அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த எஸ்.பி. லட்சுமி, விரைவில் குழந்தையை கண்டுபிடித்து தருவதாக உறுதி அளித்ததன் அடிப்படையில் பொது மக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர் .
இதையடுத்து, போலீசார் சிறுமியின் உறவினா்கள் மற்றும் தோழிகளின் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. மேலும், சோலைநகர் பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர். அதில் சிறுமி சோலைநகரில் இருந்து வெளியே செல்லும் காட்சி இடம்பெறவில்லை. பின்னர் போலீசார் அப்பகுதியை சுற்றி தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர் .

போலீசார் வழக்கு பதிவு செய்து ஐந்து தனிப்படைகள் அமைத்து தேடி வந்த நிலையில் மாணவி ஆர்த்தி சோலை நகர் அருகே உள்ள அம்பேத்கர் நகர் பகுதி வாய்க்காலில் இறந்த நிலையில் இன்று மீட்கப்பட்டுள்ளார் .
மேலும் மீட்கப்பட்ட சிறுமியின் உடல் உடற்கூறு ஆய்வுக்காக புதுவை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது .
காணாமல் போன சிறுமி பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் புதுவை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .