கோவையில் டாக்டர் அம்பேத்கர் அரசு கல்லூரி மாணவர் விடுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டு, மாணவர்களிடம் விடுதிக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து கேட்டறிந்தார்.

கோவை மாவட்டத்தில் நாளை நடைபெறும் அரசு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கோவை வந்தார். இந்த நிலையில் டாக்டர். பாலசுந்தரம் சாலையில் உள்ள டாக்டர். அம்பேத்கர் அரசு கல்லூரி மாணவர் விடுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது மாணவர் விடுதியில் வழங்கப்படக்கூடிய உணவின் தரம் குறித்தும், அப்போது விடுதியில் செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்தும் நேரடியாக மாணவர்களிடம் கேட்டறிந்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
மேலும் மாணவர் விடுதி வளாகத்தில் இருக்கக்கூடிய அறைகள் மற்றும் கழிவறை உள்ளிட்டவற்றை நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மாணவர்களுக்கு என்ன வசதிகள் தேவை என்பது குறித்து கேட்டறிந்தார்.

அப்போது அவற்றை உடனடியாக செய்து கொடுக்க மாவட்ட ஆட்சியருக்கு அறிவுறுத்தினார். மேலும் மாணவர்களுக்கு விளையாடுவதற்கு தேவையான உபகரணங்கள் இருக்கிறதா என்பது குறித்து கேள்வி எழுப்பினார்.
அப்போது மாணவர்களுக்கு தேவையான விளையாட்டு உபகரணங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து டாக்டர் அம்பேத்கர் அரசு கல்லூரி மாணவர் விடுதி வளாகத்தில் இருந்து வெளியில் வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், விடுதி வாசலில் மாணவர்களுடன் இணைந்து குழுவாக புகைப்படம் எடுத்து கொண்டனர்.
இந்த ஆய்வின் போது அமைச்சர் முத்துசாமி மற்றும் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இந்த சம்பவம் மாணவர்களிடேயே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.