சேத்தியாத்தோப்பு அருகே காதல் விவகாரத்தில் 17 வயது சிறுவன் படுகொலை செய்யப்பட்டு, உடலில் கல்லை கட்டி கிணற்றில் வீசப்பட்டான். இந்த பயங்கர சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது;
கடலூர் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அருகே உள்ள பேரூர் கிராமத்தை சேர்ந்தவர் இளையபெருமாள் கூலி தொழிலாளி. இவரது மகன் கோகுலகிருஷ்ணன் வயது 17 பத்தாம் வகுப்பு படித்துவிட்டு வீட்டிலிருந்து வந்தான். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பெற்றோரிடம் வெளியே சென்று வருவதாக கூறி வீட்டை விட்டு சென்றான். நீண்ட நேரம் ஆன பிறகும் அவன் வீட்டுக்கு திரும்பி வரவில்லை, இதனால் அதிர்ச்சடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தும், அவன் கிடைக்கவில்லை. இது குறித்து இளையபெருமாள் சோழத்தரம் போலீசில் புகார் அளித்தார்.

அதன் பேரில் கோகுலகிருஷ்ணனை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று பேருர் அருகே குறிஞ்சிக்குடி கிராமத்தில் பாஸ்கர் என்பவருக்கு சொந்தமான கிணற்றின் அருகில் கோகுலகிருஷ்ணனின் செல்போன் கிடந்தது. மேலும் அங்கு ஒரு மோட்டார் சைக்கிளிலும் நின்று கொண்டிருந்தது இது பற்றி தகவல் அறிந்தும் சேத்தியாதோப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ரூபன்குமார் மற்றும் சோழத்தரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். இதில் கோகுலகிருஷ்ணன் கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். இதனையடுத்து ஸ்ரீமுஷ்ணம் தீயணைப்பு நிலைய வீரர்கள் கிணற்றில் இறங்கி கோகுலகிருஷ்ண்னை தண்ணீருக்குள் தேடினர்.

இதில் கோகுலகிருஷ்ணனை தீயணைப்பு துறையினர் பிணமாக மீட்டனர். கோகுலகிருஷ்ணன் கழுத்தில் விட்டு காயம் இருந்தது. மேலும் அவனது உடலில் கல்லும் கட்டப்பட்டிருந்தது. இதன் மூலம் கோகுலகிருஷ்ணனை மர்மநபர்கள் அறிவாளால் வெட்டி கொலை செய்து, உடலில் கல்லை கட்டி கிணற்றில் வீசிப்பட்டு சென்றது தெரியவந்தது. இதனையடுத்து அவனது உடலை பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீஸ் நடத்திய விசாரணையில் கோகுலகிருஷ்ணன் அதே பகுதியை சேர்ந்த 17 வயதுடைய சிறுமியை காதலித்ததாக தெரியவந்தது.
இதில் ஆத்திரமடைந்த சிறுமியின் உறவினர்கள் கோகுலகிருஷ்ணனை கொலை செய்து இருக்கலாம் என கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் இரண்டு பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுவனை கொலை செய்து கல்லைகட்டி கிணற்றில் வீசிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்துள்ளது.