தேனி அரசு சட்டக் கல்லூரி அருகே கொட்டப்படும் கழிவுகளாலும், சில நேரங்களில் கழிவுகள் எரிக்கப்படுவதால் உருவாகும் புகையாலும் மாணவர்கள் அவதி உரக்கிடங்கை வேறு இடத்திற்கு மாற்ற உத்தரவிட கோரி வழக்கு.
தேனி சட்டகல்லூரி அருகே அமைக்கப் பட்டு உள்ள குப்பை மேட்டை சுற்றி , வேறு என்ன கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் உள்ளன அதன் பாதிப்பு என்ன என்பது குறித்து, தேனி முதன்மை மாவட்ட நீதிபதி நேரில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு.
தேனி மாவட்டம் ராசிங்காபுரத்தை சேர்ந்த மகேந்திரன் மதுரை அமர்வில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.
கொஞ்சம் இதையும் படிங்க : https://thenewscollect.com/4-arrested-for-extorting-money-through-google-pay-by-threatening-lovers-near-thanjavur/
அதில், “தேனி மாவட்டம் தப்புக்குண்டு சாலை பகுதியில் தேனி அரசு சட்டக் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் 700 மாணவர்கள் பயின்று வருகின்றனர். கல்லூரியின் அருகில் தேனி அல்லிநகரம் நகராட்சி நவீன கலவை உரக்கிடங்கு செயல்பட்டு வருகிறது. இங்கு கொட்டப்படும் கழிவுகளாலும், சில நேரங்களில் கழிவுகள் எரிக்கப்படுவதால் உருவாகும் புகையாலும் மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். இந்த குப்பை கிடங்கை இங்கிருந்து அகற்றுமாறு பலமுறை மனு அளிக்கப்பட்டதோடு, போராட்டங்கள் நடைபெற்றும் இதுவரை எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
கல்லூரியின் விடுதியில் தங்கிப் பயிலும் மாணவர்கள் அடிக்கடி உடல் நல குறைவால் பாதிக்கப்படுகின்றனர். ஆகவே தேனி அரசு சட்டக் கல்லூரியின் அருகே அமைந்துள்ள தேனி அல்லிநகரம் நகராட்சி நவீன கலவை உரக்கிடங்கை வேறு இடத்திற்கு மாற்ற உத்தரவிட வேண்டும்” எனக் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுப்ரமணியன், விக்டோரியா கௌரி அமர்வு,தொடர்ச்சியாக குப்பை கிடங்கை மாற்றுமாறு பலமுறை மனுக்கள் அளித்தும் ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை? குப்பை கிடங்கை மூட வேண்டும். இல்லையேல் சட்ட கல்லூரியை மூட வேண்டும் என கேள்வி எழுப்பிய நீதிபதிகள்,குப்பை கிடங்கை சுற்றி மிக அருகாமையில் வேறு என்ன கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் உள்ளன அதன் பாதிப்பு என்ன என்பது குறித்து, தேனி முதன்மை மாவட்ட நீதிபதி நேரில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
இந்த ஆய்வுக்கு மனுதாரரின் மூத்த வழக்கறிஞர் அழகுமணி உதவியாக இருப்பார். எனவும் உத்தர விட்டு , குப்பை கிடங்கு அருகே சட்ட கல்லூரி அமைக்க அனுமதி வழங்கியது ஏன் என்பது குறித்து இந்திய பார் கவுன்சில் , தமிழ்நாடு பார் கவுன்சில் தலைவர்கள், அம்பேத்கர் சட்ட பல்கலை பதிவாளர் உள்ளிட்டோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை செப்டம்பர் 9 ம் தேதி ஒத்தி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.