நடிகர் தனுஷின் மனைவி ஐஸ்வர்யா இயக்கத்தில் உருவாகும் லால் சலாம் படத்தின் முதல் ஷெட்யூல் ஷூட்டிங் நிறைவடைந்திருக்கிறது என்று படக்குழு அறிவிப்பு. ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா. தனுஷை காதலித்து திருமணம் செய்துகொண்ட அவர் சில வருடங்களூக்கு முன்பு திருமண உறவிலிருந்து வெளியே வந்தார். திருமண உறவிலிருந்து வெளியே வந்தாலும் அதிலேயே முடங்கிவிடாமல் தனது சினிமா குறித்த பணிகளில் ஆர்வமாக கவனம் செலுத்திவருகிறார்.
ஐஸ்வர்யா 3 படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தனுஷ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படம் விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்றாலும் வசூல் ரீதியாக சரியாக போகவில்லை. இதனையடுத்து வை ராஜா வை படத்தை இயக்கினார். கௌதம் கார்த்திக், ப்ரியா ஆனந்த் உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படமும் சரியான வரவேற்பைப் பெறவில்லை.

ஐஸ்வர்யா புதிதாக ’லால் சலாம்’ என்ற படத்தை இயக்கிவருகிறார். லைகா நிறுவனம் தயாரித்த இந்தப் படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். படத்தின் ஷுட்டிங் திருவண்ணாமலை உள்ளிட்ட இடங்களில் விறுவிறுப்பாக நடந்தது. லால் சலாம் படத்தின் ஹைலைட்டாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இருக்கிறார். இந்தப் படத்தில் அவர் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கவிருக்கிறார்.
கிட்டத்தட்ட 45லிருந்து 50 நிமிடங்கள்வரை ரஜினி இந்தப் படத்தில் தோன்றுவார் எனவும், அவருக்குரிய கதாபாத்திரத்தை ஐஸ்வர்யா பார்த்து பார்த்து வடிவமைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் இஸ்லாமிய கதாபாத்திரத்தில் அவர் படத்தில் தோன்றவிருக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் லால் சலாம் படத்தின் முதல் ஷெட்யூல் நிறைவடைந்திருக்கிறது. இதுதொடர்பான அறிவிப்பை லைகா நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறது.

முதல் ஷெட்யூல் நிறைவடைந்ததையொட்டி படக்குழு கேக் வெட்டி கொண்டாடியது. அதுதொடர்பான வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகியுமுள்ளது. அந்த வீடியோவில் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா உள்ளிட்டோர் இருக்கின்றனர். இதற்கிடையே தான் அப்படத்தை பற்றி ஒரு தகவல் வெளியாகியுள்ளது. லால் சலாம் படத்திலிருந்து நடிகர் விஷ்ணு விஷால் விலகிவிட்டார் என தகவல் வெளியாகி குறிப்பிடத்தக்க ஒரு விஷயமாக கோடம்பாக்க வட்டாரத்தில் பேசப்படுகிறது.
ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிப்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்த சூழலில் அவர் முதல் ஷெட்யூலில் கலந்துகொள்ளவில்லை என தெரிகிறது. எனவே விரைவில் தொடங்கவிருக்கும் இரண்டாவது ஷெட்யூலில் ரஜினிகாந்த் கலந்துகொண்டு தனது காட்சிகளை நடித்து முடிப்பார் என கூறப்படுகிறது. படமானது இந்த வருடத்துக்குள்ளாகவே வெளியாகிவிடும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.