கோவை : கோவையில் வெறி நாய் கடிக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வடமாநில தொழிலாளர் கண்ணாடியால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் ராம் சந்தர் (வயது 35). இவர் கோவையில் தங்கி தொழிலாளியாக பணியாற்றி வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரை தெரு நாய் கடித்ததாக கூறப்படுகிறது. நாய் கடிதானே என்று அலட்சியமாக எண்ணிய ராம் சந்தர் அதற்கான சிகிச்சை பெறாமல் அவரது அன்றாட வேலைகளை செய்து வந்துள்ளார் .
இந்நிலையில் நேற்று முன்தினம் அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தார். அவருக்கு நோயின் பாதிப்பு அதிகமாக இருந்ததால் அரசு மருத்துவமனையில் உள்ள வெறி நாய் கடி தனி பிரிவில் வைத்து சிகிச்சை அளித்தனர்.
அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ராம் சந்தர்க்கு ரேபிஸ் எனப்படும் நாய் வெறி நோய் தீவிரம் அடைந்துள்ளதை கண்டறிந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர் .
இதனிடையே நேற்று காலை முதல் அவரது நோயின் தாக்கம் தீவிரமடைந்து நாய் போல் குலைப்பது , தண்ணீரை கண்டால் மிரள்வது உள்ளிட்ட வினோத மாற்றங்கள் அவருக்குள் ஏற்பட்டுள்ளது . இந்நிலையில் நேற்று காலை 11 மணியளவில் வெறி நாய் கடி தனி பிரிவிலுள்ள நோட்டீஸ் போர்டு கண்ணாடியை உடைத்து தனது கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சம்பவ இடத்துக்கு வரைந்து வந்தனர். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ள பட்டு வருகின்றது . வெறிநாய் கடிக்கு சிகிச்சை பெற்றுவந்த வட மாநில வாலிபர் நோயின் தீவிரத்தால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கோவை மாநகராட்சி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் ராம் சந்தர் தற்கொலைக்கு முயன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாக பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் – 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.