கொடநாடு விவகாரத்தில் மான நஷ்ட ஈடு கோரிய வழக்கு தரப்பில் சாட்சியங்களை பதிவு செய்வதற்காக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஜனவரி 30 மற்றும் 31 ஆம் தேதிகளில் மாஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி வீடியோ வெளியிட்ட டெல்லியை சேர்ந்த பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல், வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சயான் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோருக்கு எதிராக 2019 ஆம் ஆண்டு தற்போது அதிமுக பொது செயலாளராக உள்ள எடப்பாடி பழனிசாமி, ஒரு கோடியே 10 லட்ச ரூபாய் மான நஷ்ட ஈடு கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த மான நஷ்ட ஈடு கோரிய வழக்கில் சாட்சியங்களை பதிவு செய்வதற்காக வழக்கை உயர் நீதிமன்றத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க இயலாது எனவும், தமது வீட்டில் சாட்சியத்தை பதிவு செய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமிக்க வேண்டும் எனவும் கோரி எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவை ஏற்ற உயர்நீதிமன்றம், நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க எடப்பாடி பழனிசாமிக்கு விலக்கு அளித்ததோடு இந்த நடைமுறையை அவரது வீட்டில் மேற்கொள்வதற்காக வழக்கறிஞர் ஆணையராக எஸ். கார்த்திகை பாலனை நியமித்தது. இந்த உத்தரவை எதிர்த்து மேத்யூ சாமுவேல் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு வழக்கு நீதிபதிகள் ஆர். மகாதேவன், முகமது ஷஃபிக் அமர்வில் கடந்த முறை விசாரணைக்கு வந்த போது எடப்பாடி பழனிசாமி ஆஜராவதில் இருந்து விலக்களிக்க வேண்டும் என்பதற்கு கூறும் காரணங்கள் ஏற்றுக்கொள்ளும் படியாக இல்லை என்று தெரிவித்த நீதிபதிகள், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என கூறி எடப்பாடி பழனிசாமிக்கு உரிய அறிவுறுத்தல் வழங்கும்படி அவரது வழக்கறிஞருக்கு உத்தரவிட்டிருந்தனர். அப்போது இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அதனை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் எஸ்.ஆர். ராஜகோபால், எடப்பாடி பழனிசாமி சாட்சியங்களை பதிவு செய்ய தயாராக உள்ளார். தமிழகத்தில் பொங்கல் விடுமுறை மற்றும் சட்டப்பேரவை நடைபெற உள்ளதால் அதன் பின்னர் அவர் ஆஜராவார் என்று தெரிவித்தார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், ஜனவரி 30, 31 ஆகிய இரண்டு நாட்கள் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி ஆஜராகி சாட்சியமளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.