தமிழகத்திற்கு காவிரியில் இருந்து வர வேண்டிய நியாயமான தண்ணீரையே தராத கர்நாடகா மேகதாதுவில் தடுப்பணை கட்ட தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் தமிழகத்திற்கு வரும் சிறிதளவு தண்ணீரும் வராது என்பதால் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

தற்போது கர்நாடக பட்ஜெட்டை தாக்கல் செய்த முதலமைச்சர் சித்தராமையா, முறையான அனுமதியை பெற்று விரைவில் மேகதாது அணை கட்டும் பணி தொடங்கப்படும் என அறிவித்தது சர்ச்சைகளை ஏற்படுத்தியது. தமிழகத்திலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்து உள்ளன.
இந்த நிலையில் சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இறுதி நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. காவிரி விவகாரம் தொடர்பாக மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து சட்டமன்ற உறுப்பினர்கள் தளி ராமச்சந்திரன், ஜவாஹிருல்லா ஆகியோர் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர்.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ தளி.ராமச்சந்திரன், மேகதாது அணை விவகாரம் தொடர்பாக சட்டபூர்வமான நடவடிக்கை எடுத்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தை அணுக வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
அதை தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி;- உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை செயல்படுத்த மட்டுமே காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளது. ஆனால், அதிகாரத்தை மீறி மேகதாது அணை குறித்து காவிரி ஆணைய கூட்டத்தில் விவாதித்துள்ளனர்.

அதிமுக ஆட்சி இருந்தவரை காவிரி ஆணையம், மேகதாது குறித்து தங்கள் கூட்டத்தில் பேசவே இல்லை. காவிரி ஆணையம் வரம்பை மீறி மேகதாது அணை பற்றி விவாதிக்க திமுக அரசு அனுமதித்தது ஏன்?
மேகதாது அணை குறித்து விவாதித்த காவிரி ஆணையத்தைக் கண்டித்து சட்டமன்றத்தில் கண்டன தீர்மானம் நிறைவேற்றாதது ஏன்? என்று அடுக்கடுக்காக கேள்வி எழுப்பினார். தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டும் சூழல் உருவாகும் என்றும் அவர் கூறினார்.

இதற்கு பதிலளித்த நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன்;- காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பே இறுதியானது. காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு நீண்டகாலம் தலைவரே நியமிக்கப்படாமல் இருந்தது. ஆனால் அதிமுக ஆட்சியில் பிரச்சனை வரவில்லை.
கடந்த 11 ஆம் தேதி நடந்த கூட்டத்தில் மேகதாது பற்றி விவாதிக்க தமிழ்நாடு அரசு சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அப்போது எதிர்ப்பை மீறியே விவாதிக்கப்பட்டது.

மேகதாதுவில் அணை கட்ட தமிழ்நாட்டின் அனுமதியின்றி ஒரு செங்கல் கூட கர்நாடக அரசால் வைக்க முடியாது என திட்டவட்டமாகத் தெரிவித்தார். ஆனால், மேகதாது விவகாரம் தொடர்பாக அமைச்சர் துரைமுருகன் அளித்த பதிலில் திருப்தி இல்லை எனக்கூறி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
இதனால் காவிரி குறுக்கே அணை கட்ட அனுமதிக்க மாட்டோம் என்ற முழக்கம் இட்டபடியே அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.