விருதுநகர் தொகுதியில் தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரன் தோற்கவில்லை, தோற்கடிக்கப்பட்டுள்ளார். இதனால் அங்கு மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரமேலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
விருதுநகர் மக்களவை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூர், தேமுதிக சார்பில் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன், பாஜக சார்பில் நடிகை ராதிகா சரத்குமார், நாம் தமிழர் சார்பில் கவுசிக் ஆகியோர் போட்டியிட்டனர்.

வாக்கு எண்ணிக்கை அன்று இத்தொகுதியில் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் முன்னிலையில் இருப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால், மாலையில் இறுதி சுற்றுகளில் காங்கிரஸின் மாணிக்கம் தாகூர் முன்னிலை பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் விருதுநகர் தொகுதியில் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்துள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரமேலதா விஜயகாந்த் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர்;-

“தேமுதிக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் அனைவரும் சிறப்பாக பணியாற்றி நல்ல முறையில் வாக்குகளைப் பெற்றிருக்கிறார்கள். சென்னையில் பார்த்தசாரதிக்கு (மத்திய சென்னை தொகுதி) மட்டும் தான் குறைந்த வாக்குகள் கிடைத்திருக்கின்றன.
ஆனால், திருவள்ளூரில் நல்லத்தம்பி, தஞ்சாவூரில் சிவனேசன், கடலூரில் சிவக்கொழுந்து நல்ல வாக்குகளை பெற்றுள்ளனர். விருதுநகரில் விஜயபிரபாகரன் கடைசி வரைக்கும் களத்தில் ஒரு வெற்றி வீரராக தனது அத்தனை முயற்சிகளையும் எடுத்து கடைசி நிமிடத்தில் அவர் தோல்வி அடைந்தார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உறுதியாக நான் சொல்கிறேன். விஜயபிரபாகரன் தோற்கவில்லை, தோற்கடிக்கப்பட்டுள்ளார். வீழ்ச்சியடையவில்லை, வீழ்த்தப்பட்டிருக்கிறார். இது தமிழகத்தில் இருக்கும் அத்தனை மக்களுக்கும் தெரியும்.
விஜயகாந்த் மறைவின் சோகத்திலிருந்து மீளாத நிலையில் கட்சி நிர்வாகிகள் வற்புறுத்தலின் பேரிலேயே விஜயபிரபாகர் தேர்தலில் போட்டியிட்டார். தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்துள்ளது. தேர்தல் ஆணையத்திடம் இது தொடர்பாக புகார் அளிக்க உள்ளோம்.

விரைவில் தேர்தல் ஆணையம் ஒரு நல்ல முடிவை தரும் என எதிர்பார்க்கிறோம். நீதிமன்றத்துக்கு சென்றால் வழக்கை கிடப்பில் போட்டு விடுவார்கள். எனவே தான் வழக்கு தொடரவில்லை. நீதிமன்றத்தில் உடனடியாக தீர்வு கிடைக்கும் என்றால் நாங்கள் உடனடியாக வழக்குத் தொடுக்க தயார்” என்றார்.