இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அயர்லாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 280 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது. அயர்லாந்து கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.
இதில் முதல் டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் திமுத் கருணாரத்னே பேட்டிங்கை முதலில் தேர்வு செய்தார். இதையடுத்து, நிஷான் மதுஷ்கா மற்றும் கருணாரத்னே ஆகியோர் தொடக்க வீரர்களாக களத்தில் இறங்கினர்.
மதுஷ்கா 29 ரன்னில் வெளியேற பின்னர் குசால் மென்டிசுடன் இணைந்த கருணா ரத்னே சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தார். இந்த இணை 2 ஆவது விக்கெட்டிற்கு 281 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. கருணாரத்னே 179 ரன்களும், குசால் மெண்டிஸ் 140 ரன்களும் எடுத்தனர். அடுத்து வந்த சண்டிமால் 102 ரன்னும் விக்கெட் கீப்பர் சமரவிக்ரமா 104 ரன்களும் சேர்த்தனர்.

131 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 591 ரன்களை எடுத்துள்ளது. இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய அயர்லாந்து அணி 143 ரன்னில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் டக்கர் 45 ரன்களும், ஜேம்ஸ் மெக்கலம் 35 ரன்களும், ஹேரி டேக்டர் 34 ரன்களும் எடுத்தனர்.
இலங்கையை விட முதல் இன்னிங்ஸில் 448 ரன்கள் பின் தங்கிய நிலையில் 2 ஆவது இன்னிங்சை தொடங்கிய அயர்லாந்து அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறி கொடுத்தது. அந்த அணியின் ஹேரி டேக்டர் 42 ரன்னும், கர்டிஸ் சாம்பர் 30 ரன்னும், ஜார்ஜ் டாக்ரெல் 32 ரன்னும், மார்க் அடைர் 23 ரன்னும் எடுத்தனர். மற்றவர்கள் சொற்ப ரன்னில் வெளியேற 54.1 ஓவரில் 10 விக்கெட்டுகளை இழந்த அயர்லாந்து அணி 168 ரன்கள் மட்டுமே எடுத்து இன்னிங்ஸ் மற்றும் 280 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.