தமிழ்நாட்டில் கழுகுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கணக்கெடுப்பு நடத்திய வனத்துறை குழு தகவல் தெரிவித்து உள்ளது. மேலும் அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களின் ஒருங்கிணைப்புடன் நடந்த தமிழ்நாடு வனத்துறையின் இரண்டாவது ஒருங்கிணைந்த கழுகுகள் கணக்கெடுப்பின்படி, தமிழ்நாட்டில் கழுகுகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதை அறிய முடிகிறது என்றனர்.
குறிப்பாக கடந்தாண்டு பிப்ரவரி 25, 26 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்ட முதல் ஒருங்கிணைந்த கழுகுகள் கணக்கெடுப்பு மூலம் கழுகுகளின் மொத்த எண்ணிக்கை 246 என மதிப்பிடப்பட்டுள்ளது. முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் அதை ஒட்டிய நில பரப்புகளான சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், கேரளாவின் வயநாடு, பந்திப்பூர் புலிகள் காப்பகம் மற்றும் கர்நாடகாவின் நாகர்ஹோல் புலிகள் காப்பகம் போன்றவை வரலாற்று ரீதியாக கழுகுகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறன.

இதை அடுத்து, கழுகுகளின் 2வது ஒருங்கிணைந்த கணக்கெடுப்பு கடந்த டிசம்பர் 30, 31 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்டது. இந்த முறை பில்லிகிரி ரங்கநாத சுவாமி கோவில் புலிகள் காப்பகம், கர்நாடகா மற்றும் தமிழ்நாடு முழுவதும் கணக்கெடுப்பில் இடம்பெற்றது. வான்டேஜ் பாயின்ட் எண்ணிக்கை முறை பின்பற்றப்பட்ட இந்த கணக்கெடுப்பில் 139 வான்டேஜ் பாயின்ட்களில் 4 அமர்வுகளாக இரண்டு நாட்களில் 8 மணிநேரம், அனைத்து 139 வான்டேஜ் புள்ளிகளிலும் நடத்தப்பட்டது. கழுகுகளின் மொத்த எண்ணிக்கை 320 என மதிப்பிடப்பட்டுள்ளது.
தென்னிந்தியாவில் கழுகுகளின் எண்ணிக்கையை அதிகரித்து பாதுகாப்பதற்காக முதல்வர் தலைமையிலான தமிழ்நாடு அரசு, தலைமை வனஉயிரினக் காப்பாளர் தலைமையில் மாநில அளவிலான கழுகுகள் பாதுகாப்பு குழுவை அமைத்து உள்ளது. மேலும், கழுகுகளின் எண்ணிக்கை குறைவதற்கு முக்கிய காரணமாக இருக்கும் கால்நடை சிகிச்சைக்காக விற்கப்படும் டிக்ளோஃபெனாக் மருந்து விற்பனைக்கு மருந்து கட்டுப்பாட்டு இயக்குனர் மூலம் தடை விதித்துள்ளது.

தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் பலமுறை மருந்து கட்டுப்பாட்டு துறையினரால் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, தடை செய்யப்பட்ட மருந்தை விற்பனை செய்ததற்கு 104 உற்பத்தியாளர்கள், மல்டி டோஸ் டிக்ளோஃபெனாக் விற்பனையாளர்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. மருந்தகங்களில் வழக்கமான ஆய்வு மற்றும் சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. பணிபுரியும் மருந்தாளுனர்கள் மற்றும் கால்நடை மருத்துவர்களுக்கான விழிப்புணர்வு பிரசாரம்.
கழுகுகள் உணவு தேடும் பகுதிகளில் நீர் துளைகளை உருவாக்குதல். மரபியல், அதன் கூடு கட்டுதல், உணவு தேடுதல் மற்றும் கால்நடை மருத்துவ பயன்பாட்டிற்கு பாதுகாப்பான மருந்துகள் கிடைப்பது போன்ற கழுகு பற்றிய ஆராய்ச்சியை ஊக்குவித்தல். கழுகுகளுக்கு உணவு ஆதாரத்தை அதிகரிக்கும் நோக்குடன் இதுவரை இருந்து வந்த வனவிலங்கு சடலங்களை புதைக்கும் நடைமுறையை மாற்றி, பிரேத பரிசோதனைக்குப் பின் அந்த சடலங்கள் வெட்ட வெளியில் இடப்படுகின்றன.