இலங்கையில் இருந்து தமிழ்நாடு வழியாக மங்களூர், பெங்களூருக்கு சட்டவிரோதமாக மனிதக் கடத்தலில் ஈடுபட்ட இராமநாதபுரத்தைச் சேர்ந்த நபரை தேனியில் என்.ஐ.ஏ. கைது செய்தது.பல ஆண்டுகளாக இலங்கை போன்ற நாடுகளில் இருந்து ஆட்களை கடத்தி வந்துள்ளார்.தேசிய புலனாய்வு முகமை பல ஆண்டுகளாக இந்த நபரை தேடி வந்துள்ளனர்.என்.ஐ.ஏ விற்க்கு கிடைத்த ரகசிய தகவலை தொடர்ந்து இவரை கைது செய்தது.

இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் முகம்மது இம்ரான் கான் என்ற ஹாஜா நஜீர்பீடன் (39). இவர் சட்டவிரோதமாக இலங்கையில் இருந்து தமிழ்நாடு வழியாக மங்களூர் மற்றும் பெங்களூர் பகுதிகளுக்கு மனித கடத்தலில் ஈடுபட்டதாக தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) கடந்த 2021ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தது. அதனைத் தொடர்ந்து தலைமறைவாக இருந்த இம்ரான் கானை பல இடங்களில் தேடி வந்த நிலையில் அவர் தேனி மாவட்டத்தில் இருப்பது என்.ஐ.ஏ.வால் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதியில் தங்கியிருந்த இம்ரான் கானை இன்று தேசிய புலனாய்வு முகமையினர் கைது செய்தனர்.
முதற்கட்ட விசாரணையில், இம்ரான் கான் இராமநாதபுரத்தில் இருந்து பல ஆண்டுகளாக கடத்தல் செயலில் ஈடுபடுபவர் என்றும், சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக சட்ட அமலாக்க நிறுவனங்களால் தேடப்பட்டு வந்தவர் எனத் தெரியவந்தது. மேலும் இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக 38நபர்களை தமிழ்நாடு வழியாக மங்களூர், பெங்களூருக்கு கடத்தி கொண்டு செல்ல திட்டம் தீட்டியதாக கூறப்படுகிறது.மேலும் இவர் இதே போன்று வேறு கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளாரா என விசாரித்து வருகின்றனர்.