விஜயகாந்த் எப்படி ‘கேப்டன்’ ஆனார்? : எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமலால் சாதிக்க முடியாதது ஏன்..!

4 Min Read
தேமுதிக தலைவர் விஜயகாந்த்

நடிகரும் தேமுதிக நிறுவனத் தலைவருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக இன்று (டிச.28) காலமானார். நாராயணசாமி என்ற இயற்பெயர் கொண்ட விஜயகாந்த், சினிமாவின் வாய்ப்பு தேடுவதற்காக விஜய்ராஜ் என்று தனக்கு பெயர் சூட்டிக் கொண்டார். விஜய்ராஜ் விஜயகாந்த் ஆக மாறியது. அவரின் கடின உழைப்பால் மட்டுமே அவரே எல்லோரும் அன்போடு கேப்டன் என அழைக்கப்படும் படியாக மாறியது தனி வரலாறு. தமிழ் சினிமாவில் இதுவரை ஈடுசெய்ய முடியாத சாதனையாக, மற்ற ஜாம்பவான் நடிகர்கள் பலரும் சாதிக்க முடியாததை செய்ததால் விஜயகாந்த்துக்கு கேப்டன் பெயர் கிடைத்தது என்றால் மிகையல்ல. நடிகராக அறிமுகமாகி மக்களின் மனங்களை வென்று தமிழக முதலமைச்சர் பதவியையும் அலங்கரித்தவர் நடிகர் எம்ஜிஆர். மீனா குமாரி, தர்மேந்திரா ஆகியோர் நடித்து இந்தியில் 1966ல் வெளியான திரைப்படத்தின் ரீமேக்காக வெளியான ஒளிவிளக்கு திரைப்படம் எம்ஜிஆரின் 100வது படம். ஜெயலலிதா, சவுக்கார் ஜானகி ஆகியோர் நடித்திருந்த எம்ஜிஆரின் 100வது படம் வணிக ரீதியில் வெற்றி அடையவில்லை. இதேபோல், தமிழ் சினிமாவில் நடிப்புக்கு உதாரணமாக சொல்லப்படும் நடிகர் என்றால் அது நடிகர் திலகம் சிவாஜி தான். சிவாஜியின் நடிப்பு திறமைக்கு சான்றாக இன்றும் சொல்லப்படும் படம் என்றால் அது அவரின் 100வது படமான நவராத்திரி. ஒன்பது விதமான கெட்அப்களில் சிவாஜி அற்புதமாக நடித்து அசத்தியிருப்பார்.

- Advertisement -
Ad imageAd image
விஜயகாந்த்

இப்படத்தின் பாடல்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருந்ததாலும், நவராத்திரி வெளியானபோது வசூல் ரீதியாக பெரியளவில் வெற்றியடையவில்லை. தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த். இவரின் 100வது திரைப்படமான ‘ராகவேந்திரா’ அவரின் கரியரில் மிகப்பெரிய தோல்வி படம். தனது இயல்பான நடிப்பை விடுத்து மாறுபட்ட கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்திருந்த இப்படம் ரசிகர்களை கவரவில்லை. இதனால் ரஜினியின் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய தோல்விப்படமாக 100வது படம் அமைந்தது. உலக நாயகன் கமல். இவர் நடிக்காத கதாபாத்திரங்களே இல்லை. இவர் தனது 100வது படத்தில் கண் பார்வையற்றவராக நடித்த ‘ராஜபார்வை’ படம் பாக்ஸ் ஆஃபிஸில் படுதோல்வியை சந்தித்தது. இத்தனைக்கும் இப்படத்தில் இடம்பெற்ற அந்தி மழை பொழிகிறது பாடல் பலருக்கு எவர்கிரீன் ஃபேவரைட் கொண்டாடப்பட்டது. எனினும், வியாபார ரீதியாக படுதோல்வியே கிடைத்தது. தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்கள் இவர்கள் மட்டுமல்ல, இரண்டாம்கட்ட நடிகர்களான சத்யராஜ், பிரபுவுக்கும் இதே நிலைதான். சத்யராஜின் 100வது படமான வாத்தியார் வீட்டு பிள்ளை, நடிகர் பிரவுவின் 100வது படமான ராஜகுமரன் ஆகியவையும் தோல்வி படங்களாக அமைந்தன. விஜயகாந்த் டு கேப்டன், தமிழ் சினிமாவின் ஜாம்பவான் நடிகர்கள் என்றால் எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர்தான் செல்லப்படுவார்கள்.

விஜயகாந்த்

இந்த நான்கு நடிகர்களின் 100வது படங்கள் கூட பெரும் வெற்றியை பெறாத நிலையில், விஜயகாந்த்தின் 100வது படம் மாபெரும் வெற்றியை பெற்றது. இனிக்கும் இளமை’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான விஜயகாந்த், பல வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து தனது ரசிகர்களை மகிழ்வித்து முக்கிய நடிகராக உருவெடுத்தார். தமிழ் சினிமாவில் பொதுவாக 100வது படம் வெற்றிப்படமாக அமைவது என்பது எந்த நடிகருக்கும் இதுவரை எட்டாக் கனி. இதற்கு ஒரே விதி விலக்காக இருந்தது விஜயகாந்த் மட்டுமே. ரஜினி, கமல் உச்சத்தில் இருந்த காலகட்டத்திலேயே தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு பாணியை உருவாக்கி இருவருக்கும் கடுமையான டஃப் கொடுத்தவர் விஜயகாந்த். ரஜினி, கமல் உள்ளிட்ட பெரிய நடிகர்கள் அனைவருக்கும் 100வது படம் சறுக்கியபோது, விஜயகாந்தின் 100வது படம் ’கேப்டன் பிரபாகரன்’ பெரும் ஹிட்டடித்தது. 1991ல் விஜயகாந்த்தின் 100வது படமான கேப்டன் பிரபாகரன் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் பல்வேறு புதுமைகளை விஜயகாந்த் செய்திருப்பார். அவருக்கு ஓபனிங் சாங் கிடையாது (சொல்லப்போனால் படத்தில் அவருக்கு பாடல்களே கிடையாது) ஓப்பனிங் சண்டை காட்சி கிடையாது. படம் ஆரம்பித்து 30 நிமிடங்கள் கழித்தே விஜயகாந்தின் அறிமுகம் இருக்கும். 1991ல் வெளியானது கேப்டன் பிரபாகரன். அந்தக் காலத்தில் இந்த படத்தில் பல புதுமைகளை செய்திருந்தார் விஜயகாந்த்.

விஜயகாந்த்

தமிழ் சினிமாவுக்கு புதுமையான கதை சொல்லல் மூலம் ரசிகர்களை அப்படம் கவர்ந்தது. இளையராஜாவின் பாடல்களும் பின்னணி இசையும் அற்புதமாக இருக்க, படம் 275 நாட்களையும் கடந்து, தமிழ் சினிமாவில் இதுவரை எந்த உச்ச நடிகர்களும் அமையாத வெற்றிப்படமாக அமைந்தது. பிற்காலத்தில் இந்தப் படத்தின் தலைப்பில் இடம் பெற்ற கேப்டன் என்பது விஜயகாந்தின் அடையாளமாகவே மாறிபோனது. இந்தப் படத்தின் வெற்றி, நடிகராக விஜயகாந்தின் அந்தஸ்தை உயர்த்தியது. தமிழ் சினிமா வரலாற்றில் அவருக்கு தனி இடத்தைப் பெற்றுத் தந்தது. 1999-ம் ஆண்டு நடிகர் சங்கத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட விஜயகாந்த், சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் நட்சத்திர கலைவிழா உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி அதுவரை இருந்த நடிகர் சங்கத்தின் கடனை அடைத்தார். மேலும் நலிந்த கலைஞர்களுக்கு பல்வேறு உதவிகளையும் செய்தார். நலிவடைந்த கலைஞர்களுக்கு உதவி செய்வதற்காக ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகம் செய்து, பெரும் தொகையை வங்கியில் டெபாசிட் செய்தார். இப்படி தலைமைப் பண்பிலும் வெற்றிக்கொடி நாட்டினார். ‘கேப்டன்’ என்கிற பெயர் முதலில் அவரது சினிமா ஆளுமைக்காக தொடங்கி பின்னர் தலைமைப் பண்புக்காகவும் அழைக்கப்பட்டு பின்னர் பொது உரையாடலில் கேப்டன் என்பது விஜயகாந்தின் அடையாளமாகவே மாறிபோனது.

Share This Article
Leave a review