தமிழகத்தில் தேனி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழையால் வீடுகள் இடிந்து சேதமடைந்தன. இரண்டு பேர் பலியாயினர். ஆயிரம் ஏக்கர் பயிர்கள் மூழ்கி நாசமடைந்தன. போடி மெட்டில் மண் சரிவால் 16 மணி நேரம் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் விடிய விடிய கனமழை கொட்டியது. இதில் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மழை நீர் தேங்கி நின்றது. சாயல்குடி அருகே கொண்டு நல்லான் பட்டியில் 50க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தன. சாயல்குடி அருகே வெள்ளம்பல் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி வேலுசாமி வயது 70. இவர் ஓட்டு வீடு திடீரென இடிந்து விழுந்ததில் இடிபாடுகளுடன் சிக்கி அவர் உயிரிழந்தார். இவரது பொண்ணு தாய் வயது 30 படுகாயம் அடைந்தார். ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ் மங்கலம் முதுகுளத்தூர் பகுதியில் 6 வீடுகள் சேதமடைந்தன. சிவகங்கை மாவட்டத்தில் 3 வீடுகள் சேதம் அடைந்தன. தொடர் மழையால் விருதுநகர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தண்ணீர் புகுந்தது. ஓ.முத்துலாபுரம் கண்மாய் உடைந்து ஊருக்குள் தண்ணீர் புகுந்ததை தொடர்ந்து மீட்பு குழுவினர் ஊருக்குள் சென்று வெள்ளத்தில் சிக்கிய 20 பேரை மீட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்தனர்.

திருச்சுழி சிவகாசியில் பெய்த மழையால் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்ட பயிர்கள் நீரில் மூழ்கின. தேனி மாவட்டத்தில் பெய்த கனமழையால் 17 கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட போடி மெட்டு மலைச்சாலையில் 8, 9, 11 ஆகிய வழிகளில் 3 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. மெகா சைஸ் பாறைகளும் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. முற்றிலுமாக அடைக்கப்பட்டதால் போடி மெட்டு மலை மற்றும் கேரளா பகுதியிலும் முந்தல் மலை அடிவாரத்திலும் நீண்ட வரிசையில் தமிழக, கேரளா பஸ்கள் மற்றும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. 16 மணி நேர சீரமைப்பு பணிகளை தொடர்ந்து போக்குவரத்து தொடங்கியது. வருசநாடு அருகே கீழ பூசனூத்து மயிலாடும்பாறை அருகே தேய்வேந்திரபுரம் கிராமத்தில் 3 வீடுகள் இடிந்து சேதம் அடைந்தன. உத்தமபாளையம் பகுதியில் 200 ஏக்கர் நெல் பயிர்கள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப்பகுதியில் தொடர் மழையால் நட்சத்திர ஏரி தனது முழு கொள்ளளவு எட்டி, உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.

மேலும் கொடைக்கானல் பள்ளங்கி அடிசரை கிராமத்திற்கு செல்லும் தரைப்பாலம் பூம்பாறை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் மூழ்கியது. இதனால் அப்பகுதி மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு கூட வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர். கொடைக்கானல் மேல்மலை கிராமம் கூக்கால் செல்லும் சாலையில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால் வைகை அணை நீர்வரத்து கிடுகிடுவென உயர்ந்துள்ளது. நேற்று காலை 6 மணி வினாடிக்கு 4400 கன அடியாக இருந்த நீர்வரத்து 7:00 மணிக்கு 19,280 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்ட கரையோர மக்களுக்கு முதல் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.