நீலகிரி மாவட்டம், அடுத்த கூடலுார் பகுதியில் கடந்த இரண்டு வாரத்துக்கு முன்பு, ஊட்டியில் இருந்து கர்நாடகா செல்வதற்காக, வந்த சுற்றுலா பயணிகள், மாற்று வழியில் செல்ல, ‘கூகுள் மேப்’ பயன்படுத்தி காரை ஓட்டினர். அப்போது, இணைப்பு சாலை வழியாக சென்ற, கார் சிமென்ட் சாலை படியில் சிக்கியது.

போலீசார் மக்கள் வந்து உதவியதால், 4 பேர் உயிர் தப்பினர். இந்த நிலையில், நேற்று முன்தினம் கேரளாவை சேர்ந்த சுற்றுலா பயணிகள், ஊட்டி செல்வதற்கு கூடலுார் வந்தனர். அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் இருந்ததால் மாற்று வழியில் செல்ல ‘கூகுள் மேப்’ பயன்படுத்தி உள்ளனர்.

அதன் வழிகாட்டுதல்படி, ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து, அக்ஹரகாரம் குடியிருப்புக்கு செல்லும் சாலையில் சென்றனர். 500 மீட்டர் சென்ற பின் சாலை முடிவடைந்தது. அதற்கு மேல் கார் செல்ல முடியாமலும், கரை திருப்ப முடியாமல் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.

அதனை தொடர்ந்து, ஒரு மணிநேரம் போராட்டத்துக்கு பின், அப்பகுதி மக்கள் உதவியுடன் காரை மீண்டும் ஊட்டி தேசிய நெடுஞ்சாலைக்கு திருப்பி வந்தனர். உள்ளூர் மக்கள் கூறுகையில்;- நீலகிரியில் உள்ள பல சுற்றுலா தலங்களுக்கு செல்ல ‘கூகுள் மேப்’ தவறான வழி காட்டி வருகிறது.

அப்போது சுற்றுலா பயணிகள் திணறி வருகின்றனர். இதில், உள்ள பிரச்சனையை களைய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.