பெண் எஸ்.பி பாலியல் வழக்கில் உயர்நீதிமன்றம் மனுவை ஏற்காத நிலையில் இன்று விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜரான முன்னாள் சிறப்பு டி.ஜி.பி ராஜேஷ் தாஸ் ஆஜர் ஆனார். இந்த வழக்கு விசாரணை வருகின்ற 31 ஆம் தேதி ஒத்திவைப்பு.
தமிழக முன்னாள் சிறப்பு டி.ஜி.பி பொறுப்பில் இருந்த ஒருவர், கடந்த ஆட்சியின் போது முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப் பயணத்தின் போது பாதுகாப்புக்காகச் சென்றிருந்தார். அப்போது டி.ஜி.பி, பெண் எஸ்.பி.யை தமது காரில் அழைத்துச் செல்லும் போது பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறி சம்பந்தப்பட்ட அப்பெண் எஸ்.பி அப்போதைய தலைமைச் செயலாளரிடம் புகார் அளித்திருந்தார். இந்த சம்பவம் தமிழக போலீசார் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனை அடுத்து சென்னை உயர்நீதிமன்றம், இந்த வழக்கை தாமாகவே முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இதற்கிடையே இந்த வழக்கை சிபிசிஐடிக்கு தமிழக அரசு மாற்றம் செய்தது. பின்னர் சிறப்பு டி..ஜி.பி., அவருக்கு உடந்தையாக இருந்ததாக முன்னாள் செங்கல்பட்டு எஸ்.பி.கண்ணன் ஆகியோர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர் சிபிசிஐடி போலீசார். இதன் அடிப்படையில் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் கடந்த ஜூன் 16 ஆம் தேதி முன்னாள் சிறப்பு டி.ஜி.பி ராஜேஷ்தாசிற்கு 3 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.20,500 அபராதமும் விதித்து விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதற்கு உடந்தையாக இருந்த செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி கண்ணனுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது.

இந்த சிறை தண்டனையை எதிர்த்து முன்னாள் சிறப்பு டி.ஜி.பி ராஜேஷ்தாசும், அபராதம் விதிக்கப்பட்டதை எதிர்த்து முன்னாள் எஸ்.பி கண்ணனும் விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த ஜூலை மாதம் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தனர். அப்போது மேல்முறையீட்டு வழக்கில் வாதாட முன்னாள் சிறப்பு டி.ஜி.பி ராஜேஷ் தாஸ் தொடர்ந்த கால அவகாசம் கேட்டு வந்த நிலையில் இன்று வாதாடுவதற்கு கால அவகாசம் அளிக்கப்படுவதாக நீதிபதி தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி ராஜேஷ் தாஸின் விளக்கங்களை கேட்க இன்று விசாரணையை ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து இன்று ராஜேஸ் தாஸ் நீதிமன்றத்தில் ஆஜரானார். வழக்கு விசாரணையை வருகின்ற 31 ஆம் தேதி ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். அன்று ராஜேஷ் தாஸ் தரப்பு வாதத்தை முன்வைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.