ரம்ஜான் பண்டிகை காலத்தில் களையிழந்த அன்னூர் ஆட்டுச் சந்தை – தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக வர்த்தகம் சரிவை சந்தித்துள்ளது.
தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக அன்னூர் ஆட்டுச் சந்தையில் ரம்ஜான் பண்டிகை கால விற்பனை சரிவை சந்தித்துள்ளதாக விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

கோவை மாவட்டம், அடுத்த அன்னூரில் வாரம் தோறும் சனிக்கிழமை அன்று ஆடு மற்றும் கோழி சந்தை நடைபெறுவது வழக்கம். இதனால் அன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் மேய்ச்சல் நிலங்கள் அதிகம் உள்ளதால் இந்த பகுதியில் உள்ள விவசாயிகள் வளர்க்கும் ஆடு மற்றும் கோழிகளை இந்த சந்தையில் விற்பனை செய்து வருகின்றனர்.

கோவை மாவட்டத்தில் புகழ்பெற்ற இந்த ஆட்டு சந்தையில் ஆடு மற்றும் கோழிகளை மொத்த விலைக்கு வாங்க கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி ஆகிய மாவட்டங்கள் மட்டுமல்லாது கர்நாடக, கேரள மாநிலங்களில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் வந்து செல்கின்றனர்.
அப்போது வழக்கமாக ரம்ஜான் பண்டிகை காலத்தில் களைகட்டும் அன்னூர் ஆட்டு சந்தையில் சுமார் 1.5 கோடி ரூபாய் முதல் 2 கோடி ரூபாய் வரை ஆடுகள் மற்றும் கோழிகள் விற்பனை நடைபெறும்.

ஆனால் இந்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் இன்று அதிகாலை வழக்கம் போல ஆட்டு சந்தை கூடியது.
அப்போது வழக்கத்தைக் காட்டிலும் விவசாயிகளும், வியாபாரிகளும் மிகவும் குறைவாக வந்திருந்தனர். அப்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் சுமார் 50 லட்சம் ரூபாய் அளவுக்கு மட்டுமே வியாபாரம் நடைபெற்றதாக கவலை தெரிவித்த விவசாயிகள் மற்றும் வியாபாரிகள்.

மேலும் ஒரு நபர் ரொக்கமாக 49 ஆயிரம் ரூபாய்க்குள் மட்டுமே வர்த்தகம் செய்ய முடியும் நிலை உள்ளதால், அன்னூர் ஆட்டு சந்தையில் இந்த ஆண்டு ரம்ஜான் பண்டிகை கால விற்பனை சரிவை சந்தித்துள்ளதாக தெரிவித்தனர்.