தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஆடை கட்டுப்பாடு விதித்து இந்து சமய அறநிலைத்துறை உத்தரவிட்டுள்ளது. தஞ்சாவூர் பெரிய கோவில் உலகப் பிரசித்தி பெற்ற கோவில் ஆகும்.
இது உலக பாரம்பரிய சின்னமாக விளங்குவதோடு தமிழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்து வருகிறது. தமிழ்நாட்டில் எத்தனையோ கோவில்கள் இருந்தாலும் அவற்றில் தனித்துவமானது தஞ்சை பெரிய கோவில். எத்தனையோ நம்பிக்கைகளும், கதைகளும் இந்தக் கோவிலைப் பற்றி உலா வருகின்றன. இந்த கோவில்களில் தஞ்சாவூர் பெருவுடையார் ஆலயம் ஒரு தனித்தன்மை வாய்ந்த கோவில். சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்தக் கோவில் தமிழ்நாட்டிலேயே மிகப் பெரிய விமானத்தை உடைய கோவிலாக விளங்குகிறது.

இங்கு தமிழக மட்டும் அல்லாமல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் தினமும் வந்த வண்ணம் உள்ளனர். பெரிய கோவிலுக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், வெளி மாநில பக்தர்கள் ஆண்களும், பெண்களும் அரைக்கால் சட்டை அணிந்து வருகின்றன. இதனால் மற்ற பக்தர்கள் முகம் சுளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்கும் வகையில் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் ஆடை கட்டுப்பாடு தொடர்பான அறிவிப்பு பலகையை பெரிய கோவில் நுழைவாயிலில் முன்பு வைக்கப்பட்டுள்ளது.

அதில் ஆண்கள் வேட்டி, சட்டை, பேண்ட் அணிந்தும் பெண்கள் புடவை, தாவணி, துப்பட்டாவுடன் கூடிய சுடிதார் அணிந்து வரவேண்டும் என அறிவிப்பு பலகையில் எழுதப்பட்டுள்ளது. இது தவிர மற்ற ஆடைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை எடுத்து தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அறிவிப்பு பலகை கண்டவுடன் உடனே கடைக்கு சென்று பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை மற்றும் பெண்கள் புடவைகள் அணிந்து கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். இதனை கண்ட சக பக்தர்கள் அவர்களை பாராட்டினர்.