சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் பூரண குணமடைந்து வீடு திரும்பினார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நல குறைவால் சில ஆண்டுகளாக வீட்டிலேயே ஓய்வில் இருந்து வருகிறார். சிறுநீரகம் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால் அப்போது மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து வருகிறார். இந்த நிலையில் இருமல், காய்ச்சல், சளி தொந்தரவு ஏற்பட்டதால் கடந்த மாதம் 18 ஆம் தேதி சென்னை கிண்டி அடுத்த நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றார். அவரது உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டதாக கடந்த மாத இறுதியில் மியாட் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டிருந்தது.

இதனால் விஜயகாந்த் எப்படி இருக்கிறார் என தொண்டர்கள் வேதனை அடைந்தனர். இந்த நிலையில் அவரின் உடல்நலம் குறித்து அப்போது வதந்திகள் பரவி வந்தன. அதனை அவரது மனைவி பிரேமலதா மறுத்து வந்தார். விஜயகாந்த் நலமுடன் இருப்பதாகவும், விரைவில் வீடு திரும்புவார் என்றும் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவில் விஜயகாந்த் எப்படி இருக்கிறார் என தெரிவித்ததுடன் அவருக்கு தீவிர சிகிச்சை கொடுக்கப்படவில்லை என தெரிவித்து அவருடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். இதை பார்த்தவுடன் தொண்டர்கள் சற்று நிம்மதி பெருமூச்சு விட்டனர். இந்த நிலையில் அவருக்கு வழக்கமான உடல் பரிசோதனைகளும், சிகிச்சைகளும் முடிந்த நிலையில் பூரண குணமடைந்து வீடு திரும்பினார் என மியாட் மருத்துவமனை நேற்று அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இது குறித்து மியாட் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் சென்னை மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் பூரண குணமடைந்து இன்று நேற்று வீடு திரும்பினார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விஜயகாந்த் ரசிகர்களும், தேமுதிக தொண்டர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஏற்கனவே சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை அவருக்கு செய்யப்பட்டுள்ளதால் வீட்டில் இருந்தபடியே அவர் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 21 நாட்களுக்குப் பின்னர் குணமடைந்து விஜயகாந்த் நேற்று வீடு திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.