கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது மீனவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறை பிடித்த மீனவர்களை விடுவிக்கக்கோரி இன்று முதல் வேலைநிறுத்தம் அறிவித்துள்ளனர்.
ராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இரவில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, திடீரென அப்பகுதியில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், அவர்களை விரட்டி அடித்தனர்.

அதை தொடர்ந்து இலங்கை கடற்படையினர் திடீரென சுற்றி வளைத்து படகுகளையும், மீனவர்களையும் சிறைபிடித்தனர். அதில் தங்கச்சிமடம் பகுதியை சேர்ந்த ஜஸ்டின், ரைமண்ட், ஹரின் ஆகியோரின் 3 படகை பறிமுதல் செய்தனர்.
படகில் இருந்த மீனவர்கள் காளீஸ்வரன் (44), முருகானந்தம் (27), முத்துக்குமார் (43), சீமோன் (41), ராஜ் (48), சத்தியபிரிக்லின் (36), சர்ப்பிரசாதன் (63), கருப்பையா (41), சுரேஷ் பாபு (37), காளீதாஸ் (35) உள்ளிட்ட 22 மீனவர்களை கைது செய்தனர்.

அவர்களை காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் ராமேஸ்வரத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை கடற்படையின் நடவடிக்கையை கண்டித்து ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் அனைத்து விசைப்படகு மீனவர்களின் கூட்டம், சேசு தலைமையில் நடைபெற்றது.
அதில், சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், படகுகளையும் மீட்க ஒன்றிய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பல மாதங்களாக இலங்கை சிறையில் வாடும் மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும்.

கடந்த 2018 முதல் தற்போது வரை இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் வேலைநிறுத்தம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.