கோவை மாவட்டம், அடுத்த மேட்டுப்பாளையம் பத்ரகாளியம்மன் கோவில் அருகே உள்ள பவானி ஆற்றில் குளிக்க வருவோரை ஆற்றில் மூழ்கடித்து கொல்வதாகவும், அவர்களின் உடல்களை மீட்க பணம் பெறுவதாகவும் சமூக வலைதளங்களில் இயக்குனர் பாக்யராஜ் வீடியோ ஓன்றை பதிவிட்டிருந்தார்.
இது சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த நிலையில் இது குறித்து கோவை மாவட்ட காவல்துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் பவானி ஆற்றில் செயற்கையாக மரணங்கள் ஏற்படுத்தபடுவதாக பரவும் வதந்திகள் ஆதாரமற்றது.

அப்போது இதுவரை பவானி ஆற்று பகுதியில் இந்த மாதிரியான கொலை சம்பவங்கள் எதுவும் நடந்ததாக மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் எந்தவித வழக்குகளும் பதியப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கோவை மாவட்டம், அடுத்த மேட்டுப்பாளையம் உட்கோட்டத்தில் உள்ள பவானி ஆறு காரமடை, மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை ஆகிய மூன்று காவல் நிலைய எல்லைகளில் உள்ள சுமார் 20 கிராமங்கள் வழியாக செல்கிறது எனவும், கடந்த 2022 ஆம் ஆண்டில், பவானி ஆற்றில் தற்செயலாக மூழ்கி 20 நபர்கள் இறந்துள்ளனர்.

மேலும் அடிக்கடி நீரில் மூழ்கி ஏற்படும் உயிரிழப்பைக் கருத்தில் கொண்டு, கோவை மாவட்டம் ஆயுதப்படை உதவி ஆய்வாளர் தலைமையில் 10 பயிற்சி பெற்ற காவலர்கள் அடங்கிய சிறப்புப் பிரிவு மேட்டுப்பாளையம் லைஃப் கார்ட்ஸ் என்ற பெயரில் 2023 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருவதாகவும் என்பது தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்பு மேற்படி லைஃப் கார்ட்ஸ் பவானி ஆற்றங்கரையில் ரோந்து சென்று இதுபோன்ற நீரில் மூழ்கி ஏற்படும் உயிரிழப்பை தடுக்கின்றனர் எனவும், இந்த பிரிவின் முயற்சி காரணமாக, பவானி ஆற்றில் தற்செயலாக மூழ்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 2023-ல் 6 ஆக குறைந்து இருப்பதாவும், 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் பதிவாகிய அனைத்து வழக்குகளிலும், முறையான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

அப்போது அலட்சியம் அல்லது அதீத நம்பிக்கையே இறப்புக்கான காரணம் என கண்டறியப்பட்டுள்ளது எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் ஏற்படும் மரண சம்பவங்கள் குறித்து பரவும் வதந்திகள் ஆதாரமற்றவை, உண்மையற்றவை என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.