கோவை மத்திய சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தான், என் கையை உடைத்ததாகவும், கோவை மத்திய சிறை தான் உனக்கு சமாதி என மிரட்டுவதாக சவுக்கு சங்கர் குற்றச்சாட்டு.
கோவை மத்திய சிறையில் இருந்து சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சவுக்கு சங்கர் அழைத்து வரப்பட்டார்.

கடந்த 4 ஆம் தேதி பெண் காவலர்கள் மற்றும் காவல் உயர் அதிகாரிகளை அவதூறாக பேசிய வழக்கில் சைபர் கிரைம் போலீசார் 5 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் கடந்த 6 ஆம் தேதி மத்திய சிறையில் காவலர்கள் தாக்கியதில் சவுக்கு சங்கரின் வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் மனு தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த கோவை நான்காவது குற்றவியல் நீதிமன்றம் சவுக்கு சங்கருக்கு சிகிச்சையை வழங்க உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து சவுக்கு சங்கருக்கு எக்ஸ்ரே மற்றும் பரிசோதனைகள் மேற்கொண்டதில் வலது கையில் இரண்டு இடங்களில் லேசான கிராக் இருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்தனர். இதற்காக மாவு கட்டு போட்டு மீண்டும் சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக மீண்டும் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு எக்ஸ்ரே எடுக்கப்பட்டது. பின்னர் மீண்டும் மருத்துவர்கள் மாவு கட்டு போட பரிந்துரை செய்ததை அடுத்து சவுக்கு சங்கருக்கு மாவு கட்டு போடப்பட்டது.

அங்கிருந்து வெளியே அழைத்து வரும் பொழுது கோவை மத்திய சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தான் என் கையை உடைத்ததாகவும் மேலும் கோவை மத்திய சிறை தான் உனக்கு சமாதி என மிரட்டுவதாக சவுக்கு சங்கர் குற்றச்சாட்டு வைத்தார்.
போலீசார் பாதுகாப்பாக அவரை மீண்டும் சிறை அழைத்து சென்றனர். சிறையில் இருந்து மீண்டும் நீதிமன்றத்திற்கு போலீசார் அழைத்து வர திட்டமிட்டுள்ளனர். கோவை சைபர் கிரைம் போலீசார் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க மனு அளித்திருந்த நிலையில் அதன் மீதான விசாரணை இன்று வருகிறது.