கோவை நீதிமன்ற வளாகத்தில் குடும்ப பிரச்சினை காரணமாக மனைவி மீது ஆசிட் வீசிய விவகாரத்தில் அந்தப் பெண் சிகிச்சை பலனின்றி கோவை அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்.
கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட கண்ணம்பாளையத்தை சேர்ந்தவர் கவிதா (32). இவரது கணவர் சிவா.கருத்து வேறுபாடு காரணமாக கணவன் மற்றும் மனைவி பிரிந்து தனித்தனியே வாழந்து வருகின்றனர் . இவர்களது வழக்கு கோவை நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு வருகிறது .
இந்நிலையில் கடந்த 23 ஆம் தேதி , கோவை குற்றவியல் நீதிமன்றத்தில் கவிதா வேறொரு வழக்கு விசாரணைக்காக வந்திருந்தார். கவிதா விசாரணை முடிந்து வெளியே வந்தது அவரது கணவர் சிவா தண்ணீர் பாட்டிலில் மறைத்துவைத்திருந்த ஆசிட்டை கவிதா முகத்தில் ஊற்றினார்.

80 சதவீதம் உடல் வெந்த நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் கவிதாவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
மேலும் சொந்த மனைவி மீதே ஆசிட் ஊற்றிய சிவாவை கொலை முயற்சி வழக்கில் கைது செய்த போலீசார் அவரை மத்திய சிறையில் அடைத்தனர்.
தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று இரவு கவிதா சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இதையடுத்து இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே பிரேத பரிசோதனைக்கு பின்னர் கவிதாவின் உடல் உறவினர்களிடம் இன்று ஒப்படைக்கப்பட இருக்கின்றது. நீதிமன்ற வளாகத்தில் ஆசிட் வீச்சில் காயம் அடைந்த பெண் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.