காரமடை அருகே குழந்தையை கடத்த வந்ததாக கூறி வட மாநில இளைஞரை பொதுமக்கள் மின் கம்பத்தில் கட்டி போட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கோவை மாவட்டம், அடுத்த காரமடை அருகே திம்மம்பாளையம் புதூர் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் வட மாநில வாலிபர் ஒருவர் சுற்றித் திரிந்துள்ளார். அந்த இளைஞர் குழந்தைகளை நோட்டமிட்டதாக கூறப்படும் நிலையில், அவரை அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பிடித்து விசாரித்தனர்.

அதற்கு அந்த இளைஞர் வட மாநில மொழியில் பேச எதுவும் புரியாததால், அந்த இளைஞர் குழந்தைகளை நோட்டமிட்டு கடத்தி செல்லும் நபராக இருக்க கூடும் என சந்தேகித்த பொதுமக்கள், அவரை மின்கம்பத்தில் கட்டி வைத்த பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்.

பின்னர் இதுகுறித்து காரமடை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அங்கு விரைந்த வந்த போலீசார், காயமடைந்த வட மாநில இளைஞரை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து காரமடை போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், வட மாநில வாலிபர் மின்கம்பத்தில் கட்டி வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பான காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.