தமிழகத்தில், கனமழை பாதித்த இடங்களுக்கு நேரில் சென்று நிவாரண உதவிகள் வழங்குமாறு அமைச்சர்கள் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் உள்ளாட்சிப் பணியாளர்களுக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அதிரடி உத்தரவிட்டுள்ளார். மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யுமாறு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் நேற்று பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காலை முதலே தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இது தொடர்ந்து கனமழையால் பாதிக்கும் இடங்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட கலெக்டர் மற்றும் அனைத்து துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். அதன்படி அனைத்து அதிகாரிகளும் களத்தில் இறங்கி மக்களுக்கு பணியாற்றி வருகின்றன.

மாநில, மாவட்ட அவசர கால கட்டுப்பாடு மையங்கள் 24 மணி நேரமும் கண்காணிப்பு தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இந்த கட்டுப்பாட்டு மையங்களுக்கு வரும் தகவல் அடிப்படையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அதிகாரிகள் நேரில் சென்று தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் அதிகாரிகளுடன் சேர்ந்து அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும் கனமழையால் பாதித்த இடங்களுக்கு நேரில் சென்று நிவாரண பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கனமழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பொது மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மேற்கொள்ளுமாறு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார். கனமழை பாதித்த இடங்களுக்கு நேரில் சென்று களப்பணியாற்ற வேண்டும். கனமழையால் பொதுமக்கள் எந்தவித சிரமத்திற்கு உள்ளாத வகையில் உடனுக்குடன் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார்.