தேமுதிக தலைவர் விஜயகாந்தின் இறுதிச் சடங்கில் பங்கேற்க பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.
தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி இன்று (டிச.28) காலை காலமானார். அவருக்கு வயது (71). அவரது மறைவால் தேமுதிக கட்சித் தொண்டர்கள், திரை ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். விஜயகாந்த் இல்லத்தில் உள்ள தேமுதிக கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது. அவரது மறைவு தொடர்பாக மியாட் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், “நிமோனியா (நுரையீரல் அழற்சி) காரணமாக அனுமதிக்கப்பட்டு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்றுவந்த விஜயகாந்துக்கு மருத்துவப் பணியாளர்களின் கடின முயற்சி இருந்தபோதிலும் காலமானார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று (டிச.28) அவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. வென்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்படுவதாக தேமுதிக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது.

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் இறுதிச் சடங்கில் பங்கேற்க பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. தேமுதிக தலைவர் விஜயகாந்த் நிமோனியா தொற்றால் நேற்று காலை இந்த மண்ணுலகை விட்டு பிரிந்துவிட்டார். அவருடைய உடல் தேமுதிக கட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இந்த நிலையில் இடநெருக்கடி காரணமாக அவரது உடல் தீவுத்திடலுக்கு இன்று காலை 5 மணியளவில் கொண்டு செல்லப்பட்டது. அங்கு விஜயகாந்தின் உடலுக்கு ரஜினிகாந்த், கமல்ஹாசன், குஷ்பு, நளினி, ராதாரவி, வாகை சந்திரசேகர், பாக்யராஜ், சாந்தனு உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். அது போல் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், ஓபிஎஸ், கடம்பூர் ராஜு, ஜிகே வாசன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, கராத்தே தியாகராஜன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

விஜயகாந்தின் இறுதிச் சடங்குகள் இன்று மாலை 4.45 மணிக்கு நடைபெறுகிறது. விஐபிகள் அஞ்சலி செலுத்தி முடித்துவிட்ட நிலையில் தீவுத்திடலில் இருந்து விஜயகாந்தின் உடல் ஊர்வலமாக தேமுதிக அலுவலகத்திற்கு கொண்டு வரப்படுகிறது. ஊர்வலத்திற்கு பூ அலங்காரம் செய்யப்பட்ட வாகனம் தயாராக உள்ளது. அவரது உடல் தேமுதிக கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்யப்படுகிறது. இதற்காக அங்கு குழித்தோண்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் விஜயகாந்தின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. கூட்டநெரிசலை தவிர்க்க உறவினர்கள், குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள் என 200 பேருக்கு மட்டும் காவல் துறையினர் பாஸ் வழங்குகிறார்கள். அந்த பாஸை பெற்றவர்கள் மட்டும்தான் இறுதிச் சடங்கில் பங்கேற்க வேண்டும். பாஸ் இல்லாதவர்களுக்கு இறுதி சடங்கில் கலந்து கொள்ள அனுமதி இல்லை என கோயம்பேட்டில் காவல் துறையினர் ஒலிப்பெருக்கி மூலம் அறிவித்து வருகிறார்கள்.