தலைநகர் டெல்லி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதியில் உள்ள சுமார் 100 பள்ளிகளுக்கு இன்று மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. பெற்றோர்களும், மக்களும் பீதி அடைந்துள்ளனர். அதை தொடர்ந்து, பள்ளிகள் மாணவர்களை வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் இதுவரை சந்தேகத்திற்குரிய எதுவும் கிடைக்கவில்லை.

டெல்லி போலீஸ் செய்தி தொடர்பாளர் சுமன் நல்வா இதுகுறித்து பேசிய போது;- வெடிகுண்டு மிரட்டல் வந்த பள்ளிகளுக்கு உரிய அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். சந்தேகப்படும் படியான எதுவும் கிடைக்காததால் பெற்றோர்கள் பீதியடைய வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்தார்.
மத்திய உள்துறை அமைச்சகமும் இதற்கு விளக்கமளித்துள்ளது. இது வெறும் புரளி என்பதால் மக்கள் பீதி அடைய தேவையில்லை. என்று தெரிவித்துள்ளது.

டெல்லி காவல்துறை மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் நெறிமுறைகளின் படி தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட மின்னஞ்சலின் ஐபி முகவரியைக் கண்டுபிடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால் இது வரை யார் அந்த மின்னஞ்சலை அனுப்பியது, எங்கிருந்து அனுப்பியது என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை.

பீதியை பரப்பும் வகையில் அனைத்து பள்ளிகளுக்கும் மெயில் அனுப்பப்பட்டுள்ளது. சைபர் செல் பிரிவும் மின்னஞ்சல் மற்றும் ஐபி முகவரியைக் கண்டுபிடிக்க முயற்சிக்கிறது என்று போலீசார் தெரிவித்தனர்.
சாணக்யபுரியில் உள்ள சமஸ்கிருதி பள்ளி, கிழக்கு டெல்லியில் உள்ள மயூர் விஹாரில் உள்ள மதர் மேரி பள்ளி மற்றும் துவாரகாவில் உள்ள டெல்லி பப்ளிக் பள்ளி ஆகிய பள்ளிகளுக்கு, இன்று அதிகாலை வெடிகுண்டு இருப்பதாக மின்னஞ்சல் அனுப்பப்பட்டது.

அதன்பிறகு, வளாகத்தில் வெடிபொருட்கள் இருப்பதாகக் கூறி, ஏறக்குறைய 100 பள்ளிகளுக்கும் இதேபோன்ற அஞ்சல்கள் வந்துள்ளன.

வெடிகுண்டு கண்டறியும் குழு, வெடிகுண்டு செயலிழக்கும் குழு மற்றும் டெல்லி தீயணைப்பு சேவை அதிகாரிகள் பள்ளிகளுக்கு விரைந்துள்ளனர். அச்சுறுத்தல் இல்லாத சில பள்ளிகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாணவர்களை வீட்டுக்கு அனுப்பியுள்ளன.

டெல்லி கல்வி அமைச்சர் அதிஷி, இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். மேலும் எந்த பள்ளியிலும் சந்தேகத்திற்குரிய எதுவும் இதுவரை கண்டறியப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “இன்று காலை சில பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் வெளியேற்றப்பட்டு அந்த வளாகங்களை டெல்லி போலீசார் சோதனை செய்து வருகின்றனர்.

இதுவரை எந்த பள்ளிகளிலும் எதுவும் கிடைக்கவில்லை. நாங்கள் காவல்துறை மற்றும் பள்ளிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம். நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.
பெற்றோர்களும், குடிமக்களும் பீதியடைய வேண்டாம், தேவைப்படும் இடங்களில் பெற்றோர்களுடன் தொடர்பில் இருப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.

பிப்ரவரியில், ஆர்.கே.புரத்தில் உள்ள டெல்லி போலீஸ் பள்ளியில் இதேபோன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. பின்னர் அது புரளி என்று தெரியவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.