தூத்துக்குடி மாவட்டம் ஆலங்கிணறு கிராமத்தைச் சேர்ந்தவர் பூல்பாண்டியன் (75). மனைவி மறைந்த நிலையில், ஒரு மகனும் இரண்டு மகள்களும் உள்ளனர். 1980 முதல் மும்பையில் வேலை பார்த்து வந்த இவர் 2019 தமிழ்நாட்டிற்கு வந்துள்ளார்.
தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் மஸ்கோத் அல்வா தயாரிப்பு கடையில் பணிபுரிந்து வந்துள்ளார். அன்று முதல் இவர் தான் யாசகமாக பெற்ற தொகையை தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஊராட்சி பள்ளிகளுக்கு தேவையான உபகரணங்கள் வாங்கவும் கல்வித்தொகை வழங்கவும் கொடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இந்நிலையில் கொரோனா தொற்றுக்கு பின் தான் யாசகமாக பெரும் தொகைகளை ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர்களிடமும் அவ்வப்போது பெரும் தொகைகளை பத்தாயிரம் ரூபாய் சேர்ந்தவுடன் முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்குவதை வழக்கமாகக் கொண்டு வந்துள்ளார்.
சாமியார் போல தோற்றமளிக்கும் இவர் கோயில்களில் தங்குவதை காட்டிலும் காவல்துறை பாதுகாப்பு இருக்கக்கூடிய இடங்களான பேருந்து நிலையங்கள், முக்கிய சாலை சந்திப்புகள், ரயில் நிலையங்கள் ஆகிய இடங்களில் தங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இதுவரை 35க்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கு நேரடியாக சென்று மாவட்ட ஆட்சியர்களிடம் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தொகைகளை வழங்கியுள்ள இவர், இன்று கோவை வந்தடைந்து யாசகமாக பெற்ற பணத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கினார்.