தமிழக முதல்வரின் குடும்பத்தினர் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு கருத்துக்களை பதிவிட்டதாக கைது செய்யப்பட்டவருக்கு, சென்னை உயர் நீதிமன்றம், நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.
சமூக வலைதளங்களில், தமிழக முதல்வரின் குடும்பத்தினர் குறித்து அவதூறு கருத்துக்களை பதிவிட்டதாக தமிழரசன் என்பவர் கடந்த ஜனவரி 23 ம் தேதி கைது செய்யப்பட்டார்.
ஜாமீன் கோரி தமிழரசன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு, நீதிபதி சுந்தர மோகன் முன் விசாரணைக்கு வந்த போது, இதுபோன்ற செயல்களில் இனி ஈடுபடப் போவதில்லை என உத்தரவாத மனு தாக்கல் செய்ய தயாராக இருப்பதாகவும், அதனால் ஜாமீன் வழங்க வேண்டும் எனவும் மனுதாரர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

ஆனால், இதேபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும், ஏற்கனவே ஒரு வழக்கில் விதிக்கப்பட்ட ஜாமீன் நிபந்தனையை மீறியுள்ளதால், இந்த வழக்கில் ஜாமீன் வழங்கக் கூடாது எனவும் காவல் துறை தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இனிமேல் இதுபோன்ற செயல்களில் ஈடுபடப் போவதில்லை என உத்தரவாதம் அளித்து, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையுடன் தமிழரசனுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.