நைஜீரியாவில் புதன்கிழமை அன்று நடந்த கொடூர துப்பாக்கி சூட்டில் , ஐம்பதிற்கும் மேற்பட்டோர் பரிதாபமாக இருந்துள்ளதாக அம்மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .
ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் பெனு மாகாணம் உமோகிடி என்ற கிராமத்துக்குள் நேற்று மர்ம கும்பல் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் நுழைந்தது. அவர்கள் அங்கு கண்ணில் பட்டவர்களையெல்லாம் சரமாரியாக சுட்டு தள்ளினர்.
இதனால் செய்வதறியாத உமோகிடி பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு ஓட ஆரம்பித்தனர். சிலர் பயத்தில் புதர்களுக்குள் ஒளிந்து கொண்டனர். எனினும் அந்த மர்ம கும்பல் ஈவு இரக்கமின்றி சுட்டுத்தள்ளியுள்ளனர் .

இந்த பயங்கர சம்பவத்தில் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். கிராமத்தில் உள்ள விவசாயிகளுக்கும், கால்நடை மேய்ப்பவர்களுக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
இப்பகுதியில் கால்நடை மேய்ப்பர்களுக்கும், விவசாயிகளுக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் நடைபெறுவது வழக்கம். கால்நடைகளை வளர்ப்பவர்கள் தங்கள் பயிர்களை அழிப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
அதே நேரத்தில் விவசாயிகள் தங்கள் கால்நடைகளை தாக்குவதாக கால்நடை வளர்ப்பவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த தாக்குதலால் 50 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.