திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே விடுமுறையை பயன்படுத்தி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி சத்துணவு கூடத்திற்குள் புகுந்து முட்டைகளை திருடி ஆம்லெட் போட்டுத் தின்று பார்ட்டி கொண்டாடிய மது பிரியர்கள். இதனை கண்ட பணியாளர்கள் அதிர்ச்சி.
இந்த நிலையில் மதுபிரியர்கள் மது அருந்தி விட்டு, இரு சக்கர வாகனத்தில் பள்ளி மாணவிகளை பயமுறுத்துதல், பெண்கள் செல்லும் போது ஆபாச வார்த்தைகள் பேசுதல், மதுபாட்டிகல்கள், பிளாஸ்டிக் பாட்டில்களை வயல்நிலங்களில் வீசுதல், பள்ளி மாணவர்களை குடிப்பழக்கத்திற்கு ஆளாக்குதல், திருட்டு சம்பவத்தில் ஈடுபடுதல் உள்ளிட்ட பல்வேறு ஒழுக்க கேடான செயல்களை செய்து வருவதாக கூறுகின்றனர். மது பிரியர்கள் அட்டகாசத்தால் புதியதாக செய்த சம்பவம் பின்வருமாறு;-

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையை அடுத்த உள்ள சுட்டிகாலாடிபட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சுமார் 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். கடந்த இரண்டு நாட்களாக சனி, ஞாயிறு போன்ற நாட்களில் தொடர் விடுமுறை நாட்கள் என்பதால் அதே கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் பள்ளியின் காம்பௌண்ட் சுவர் தாண்டி குதித்து உள்ளே சென்று சத்துணவு கூட சமையலறையின் பூட்டை உடைத்தனர்.
பின்னர் சமையலறையின் உள்ளே சென்று குழந்தைகளுக்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 30-க்கும் மேற்பட்ட சத்துணவு முட்டைகளையும், எண்ணெய், மசாலா பொடிகளை பயன்படுத்தி அங்கேயே உள்ள அடுப்பில் ஆம்லெட் போட்டு மது அருந்தி பார்ட்டி கொண்டாடியதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து நேற்று காலை வழக்கம் போல சமயலறையைத் திறந்த பார்த்த பணியாளர்கள் சத்துணவு முட்டைகள் திருடப்பட்டு முட்டைகளை உடைத்து ஆம்லெட் போட்டு தின்று பார்ட்டி கொண்டாடி அலங்கோலமாக காட்சி அளித்ததை கண்டு பணியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனை அடுத்து மது பிரியர்கள் அட்டகாசத்தால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி, வந்த சத்துணவு பணியாளர்கள் மேலிட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் இளைஞர்கள் சிலர் விடுமுறை நாளில் அத்துமீறி பள்ளியில் உள்ளே நுழைந்து குழந்தைகளுக்காக வைக்கப்பட்டிருந்த சத்துணவு முட்டைகளை திருடி ஆம்லெட் போட்டு பார்ட்டி கொண்டாடியது பள்ளி ஆசிரியர்கள், பணியாளர்களில் இடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் மற்ற பொருட்களான கேஸ் சிலிண்டர் மற்றும் மீத முட்டைகள் அரிசி, பருப்பு எண்ணெய்களை உட்பட மற்ற பொருட்களை அப்படியே விட்டுச் சென்றது அவர்களுடைய சிறிது நிம்மதியையும் ஏற்படுத்தியதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.